2011-05-05 15:50:33

பிறரன்புச் சேவைகளுக்கு உதவிகள் செய்யும் பாப்பிறை அறக்கட்டளைக்கு திருத்தந்தையின் செய்தி


மே 05,2011. திருத்தந்தையர்களின் எண்ணங்களுக்கேற்ப மேற்கொள்ளப்படும் பல பிறரன்புச் சேவைகளுக்கு உதவிகள் செய்யும் பாப்பிறை அறக்கட்டளைக்கு தன் நன்றிகளைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஒவ்வொரு ஆண்டும் பாப்பிறை அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் உரோமைக்கு வருகை தரும் தருணத்தையொட்டி, இவ்வாண்டு திருத்தந்தை அவர்களை வரவேற்று அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
உயிர்ப்புத் திருவிழா காலத்தில் இவ்வறக்கட்டளை உறுப்பினர்கள் உரோமைக்கு வந்திருப்பதற்கு தன் மகிழ்வைத் தெரிவித்த திருத்தந்தை, இவ்வறக்கட்டளை மேற்கொள்ளும் பல செயல்பாடுகள், அகில உலகத் திருச்சபையின் ஒவ்வொரு மறைமாவட்ட அளவிலும் முழு மனித முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு செயல்படுவதைச் சுட்டிக்காட்டினார்.
நடைமுறை உலகத்தின் மீது திருத்தந்தையர்கள் கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்த நிறுவப்பட்ட பாப்பிறை அறக்கட்டளை, திருச்சபையின் வருங்காலத்தலைவர்களை உருவாக்கும் கல்விப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பது நம்பிக்கை தரும் ஒரு செயல் என்பதையும் திருத்தந்தை தன் செய்தியில் சுட்டிக்காட்டினார்.இவ்வறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்குவதாகவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் செய்தியின் இறுதியில் கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.