2011-05-04 15:44:06

ஸ்பெயின் நாட்டில் திரு நற்கருணையை மையப்படுத்திய 1000மாம் ஆண்டு ஜுபிலி கொண்டாட்டங்களின் நிறைவு


மே 04,2011. ஸ்பெயின் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள Ivorra என்ற ஒரு சிறு கிராமம் கடந்த ஞாயிறு மே மாதம் முதல் தேதியன்று தன் 1000மாம் ஆண்டு ஜுபிலி கொண்டாட்டங்களை நிறைவு செய்தது.
இக்கிராமத்தில் 1010ம் ஆண்டு திருநற்கருணையை மையப்படுத்திய ஒரு புதுமை நிகழ்ந்தது. அப்புதுமை நடந்த 1000மாம் ஆண்டு ஜுபிலி கொண்டாட்டங்களை வத்திக்கான் அனுமதியுடன் 2010ம் ஆண்டு மே மாதம் இக்கிராமம் ஆரம்பித்தது.
160 பேர் வாழும் Ivorra கிராமத்தில் இந்த ஜுபிலி ஆண்டில் 14000 மக்கள் வந்திருந்தனர் என்று பங்குத் தந்தை அருள்திரு Fermin Manteca கூறினார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அக்கிராமத்துப் பங்கில் பணி புரிந்த அருள்தந்தை Bernat Oliver இயேசுவின் அப்பரச பிரசன்னம் குறித்த சந்தேகங்களுடன் ஆற்றிய திருப்பலியில், பீடத்தில் வைக்கப்பட்டிருந்த திருக்கிண்ணத்தில் இருந்த திராட்சை இரசம் இரத்தமாக மாறி, கிண்ணத்திலிருந்து வழிந்து பீடத்துணியை இரத்தத்தில் தொய்த்ததைக் கண்ணுற்றார்.
இந்த நிகழ்ச்சி அப்பகுதியின் ஆயர் Ermengol வழியாக அப்போதையத் திருத்தந்தை 6 ம் Sergiusக்கு தெரிவிக்கப்பட்டது. திருத்தந்தையும் ஒரு பாப்பிறை சாசனம் வழியாக இந்தப் புதுமையை உலகறியச் செய்தார்.
ஒவ்வோர் ஆண்டும் உயிர்ப்புத் திருவிழாவுக்கு அடுத்ததாக வரும் பாஸ்கா காலத்து இரண்டாம் ஞாயிறு இந்தப் புதுமை விழா கொண்டாடப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.