2011-05-04 15:32:49

திருத்தந்தை : சமய சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுவதற்குத் திருப்பீடம் எல்லா நாடுகளுக்கும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றது


மே 04,2011. இக்காலத்திய கருத்துக் கோட்பாடுகளில் அடிப்படை மனித உரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும்வேளை, சமய சுதந்திரத்தையும் வழிபாட்டுச் சுதந்திரத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய சவாலை நாம் எதிர்நோக்குகிறோம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கான் சமூக அறிவியல் கழகம் வத்திக்கானில் நடத்திய 17வது ஆண்டுக் கூட்டத்திற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, மேற்கத்திய கிறிஸ்தவக் கலாச்சாரம் உலகில் சமய சுதந்திரத்திற்குப் பெரும் பங்கு ஆற்றியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான சமய சுதந்திரம், மனிதன் தனது நிறைவை அடையவும் அதன்மூலம் சமுதாயத்தின் பொது நலனுக்குத் தனது பங்கை வழங்கவும் வழி செய்கின்றது என்றும் திருத்தந்தையின் செய்தி கூறியது.
மனிதரின் அடிப்படை உரிமையான சமய சுதந்திரம் அங்கீகரிக்கப்படுவதற்கும் அது மதிக்கப்படுவதற்கும் திருப்பீடம் எல்லா நாடுகளுக்கும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வரும் என்றும் அவரின் செய்தி கூறியது.
பெரும்பான்மை மதத்தவர் வாழும் ஒரு நாட்டில் சிறுபான்மையினர் அமைதியுடன் வாழவும், நாட்டின் பொது மற்றும் அரசியல் வாழ்வில் அவர்கள் முழுமையாகப் பங்கேற்கவும் அனுமதிக்கப்படுமாறும் திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வத்திக்கானில் இச்செவ்வாயன்று நிறைவடைந்த ஐந்து நாள் கூட்டம், “பன்மைத்தன்மை கொண்ட உலகில் உலகளாவிய உரிமைகள் : சமய சுதந்திரம்” என்ற தலைப்பில் நடைபெற்றது. திருத்தந்தையின் இச்செய்தி, இத்திருப்பீடக் கழகத் தலைவர் Mary Ann Glendon க்கு அனுப்பப்பட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.