2011-05-03 16:17:36

அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களது சவப்பெட்டி புனித செபஸ்தியார் பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது


மே03,2011. அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் உடலைக் கொண்டுள்ள சவப்பெட்டி வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் புனித செபஸ்தியார் சிற்றாலயப் பீடத்தில் இத்திங்கள் இரவு வைக்கப்பட்டது.
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவின் மையப்பீடத்திற்கு முன்பாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த இந்த மரச் சவப்பெட்டியின் முன்பாக முதலில் சிறிய செபம் சொல்லப்பட்டது. அதன் பின்னர் அது புனித செபஸ்தியார் சிற்றாலயப் பீடத்திற்குப் பவனியாக எடுத்துவரப்பட்டது.
வத்திக்கான் பசிலிக்காவின் முதன்மைக்குரு கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்திரி தலைமையில் ஒன்பது கர்தினால்கள், பல பேராயர்கள், ஆயர்கள், அத்திருத்தந்தையைக் கவனித்து வந்த போலந்து அருட்சகோதரிகள் உட்பட ஒரு சிறிய குழு இப்பவனியில் கலந்து கொண்டது.
புனித பேதுரு தொழிற்சாலைப் பணியாளர்கள் Beatus Ioannes Paulus PP. II. என்று எழுதப்பட்ட வெள்ளை பளிங்குக் கல்லை இந்தப் பெட்டியின் மீது வைத்தனர்.
புனித செபஸ்தியார் சிற்றாலயப் பீடத்திற்கு வலதுபுறத்தில் திருத்தந்தை 11ம் பத்திநாதரின் திருவுருவமும், இடதுபுறத்தில் திருத்தந்தை 12ம் பத்திநாதரின் திருவுருவமும் இருக்கின்றன.







All the contents on this site are copyrighted ©.