திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பல விடயங்கள்
இருக்கின்றன
ஏப்ரல்29,2011. ஏழைகள், ஓரங்கட்டப்பட்டோர், பெண்கள், மனித வாழ்வு போன்றவைகளுக்கு ஆதரவாக
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் தம்மை அர்ப்பணித்து குரல் கொடுத்தது, இன்றைய இந்தியாவுக்கு
மிகவும் பொருத்தமானதாக இருக்கின்றது என்று இயேசு சபை அருள்தந்தை செட்ரிக் பிரகாஷ் கூறினார். அகமதாபாத்தில்
இயங்கும் “பிரஷாந்த்” என்ற மனித உரிமைகள், நீதி மற்றும் அமைதிக்கான மையத்தின் இயக்குனராகிய
அருள்தந்தை செட்ரிக் பிரகாஷ், “திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், இந்தியா மற்றும் இந்தியத்
திருச்சபையில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்” பற்றி ஆசியச் செய்தி நிறுவனத்துக்கு எழுதிய
கட்டுரையில் இவ்வாறு கூறினார். திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், அனைத்துலகத் தொழிலாளர்
தினத்தன்று அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படுவது மிகவும் பொருத்தமானது என்றுரைத்த அக்குரு,
1981ம் ஆண்டு செப்டம்பரில் மனித உழைப்பு என்ற திருமடலை வெளியிட்டதிலிருந்து 2005ம் ஆண்டு
அவர் இறக்கும் வரை கத்தோலிக்கச் சமூகப் போதனைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்தார்
என்றும் கூறினார்.