தாதாசாஹெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind
Phalke) இந்திய திரைப்படத்துறையின் தந்தையாகக் கருதப்படுகிறார். இந்தியாவிற்குத் திரைப்படத்தை
முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார்.
பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள்
எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது
தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் ‘ராஜா அரிச்சந்திரா’.
நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த
மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்தார். எனவே முதல் இந்திய சினிமா,
ஒரு குடும்பப் படம் என்றும் சொல்லலாம். 1870ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி நாசிக்கில் பிறந்த
தாதாசாஹெப் பால்கே, 1944ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி காலமானார். அவருடைய நினைவாக தாதாசாஹெப்
பால்கே விருது நிறுவப்பட்டது.