5. சத்ய சாய் பாபாவின் அடக்கத்தை அடுத்து, கிறிஸ்தவத் தலைவர்களின் செய்திகள்
ஏப்ரல் 28,2011. சத்ய சாய் பாபாவின் உடல் இப்புதனன்று அடக்கம் செய்யப்பட்டதை அடுத்து,
தங்கள் ஆழ்ந்த வருத்தங்களையும், கருத்துக்களையும் கிறிஸ்தவத் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர். சத்யா
சாய் பாபாவின் மறைவுக்குப் பிறகும் அவர் ஆரம்பித்து வைத்த பல மனித நலச் சேவைகள் தொடரும்
என்று நம்புவதாக நெல்லூர் ஆயர் மோசஸ் பிரகாசம் கூறினார். சாய்பாபாவின் வழியைப் பின்பற்றும்
அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார் இந்திய ஆயர்கள் பேரவை சார்பாகப் பேசிய
அருள்தந்தை பாபு ஜோசப். அனைவருக்கும் அன்பு, அனைவருக்கும் சேவை என்ற வழிகளைப் பின்பற்றிய
சத்ய சாய்பாபா இயேசுவின் உயிர்ப்புத் திருநாளன்று இவ்வுலகை விட்டுச் சென்றது ஒரு வகையில்
பொருத்தமாக உள்ளதென்று இயேசு சபைக் குருக்களான தேவதாஸ், செல்வராஜ் ஆகியோர் கூறினர்.இந்துக்களின்
மரபுப்படி இறந்தோரின் உடல் தகனம் செய்யப்படும். ஆனால், தெய்வத் தன்மை கொண்டவர்களாய் கருதப்படுவோர்
அடக்கம் செய்யப்படுவர். இந்த பழக்கத்தின்படி, 85 வயதான சத்ய சாய்பாபாவின் உடல் புட்டப்பர்த்தியில்
உள்ள ஆசிரமத்தின் மைய மண்டபத்தில் அரசு மரியாதையுடன் இப்புதனன்று அடக்கம் செய்யப்பட்டது.