வில்லியம் ஷேக்ஸ்பியர், ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் மற்றும் உலகின் மிகப்
புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர். பல சமயங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றும் இவர்
அழைக்கப்படுகிறார். வாழும் அவரது படைப்புகளில் ஏறக்குறைய 38 நாடகங்கள், 154 செய்யுள்
வரிசைகள், இரண்டு நெடும் விவரிப்புக் கவிதைகள் மற்றும் பிற கவிதைகள் அடங்கும். அவரது
நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறன. வேறு எந்த ஒரு
நாடகாசிரியரின் நாடகங்களை விடவும் இவரது நாடகங்கள் ஆண்டுதோறும் அதிகமாக நடத்தப்படுகின்றன.
இவர் தனது புகழ்பெற்ற படைப்புகளில் பலவற்றை 1589 மற்றும் 1613ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட
காலத்தில்தான் உருவாக்கினார். அவரது ஆரம்ப நாடகங்கள் முக்கியமாக நகைச்சுவை மற்றும் வரலாறுகள்
எனப் பல பிரிவுகளைத் தொட்டன. பின் சுமார் 1608ம் ஆண்டுவரைத் துன்பயியல் நாடகங்களை முக்கியமாக
எழுதினார். ஹாம்லட், கிங் லியர் மாக்பெத் ஆகிய ஆங்கில மொழியின் மிகச் சிறந்த படைப்புகளாகக்
கருதப்படும் சிலவும் இதில் அடங்கும். ஷேக்ஸ்பியர் தனது காலத்திலேயே மதிப்பு மிகுந்த கவிஞராகவும்
நாடக ஆசிரியராகவும் இருந்தார். எனினும் பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதி வரை அவரது மதிப்பு
இன்றைய உயரத்தில் இருக்கவில்லை. குறிப்பாக காதல்வீரக் காவியங்கள் ஷேக்ஸ்பியரின் திறமையைப்
போற்றின. இருபதாம் நூற்றாண்டில் அவரது படைப்புகள் பல்வேறு இயக்கங்கள் மூலமும் எடுத்தாளப்
பெற்றன. அவரது நாடகங்கள் இன்று மிகவும் புகழ் மிக்கவையாகத் திகழ்வதோடு, உலகெங்கிலும்
பன்முகக் கலாச்சார மற்றும் அரசியல் பொருளில் தொடர்ந்து படிக்கப்பட்டும், மறுபுரிதல் கொள்ளப்பட்டும்
வருகின்றன. 1564ம் ஆண்டு பிறந்த வில்லியம் ஷேக்ஸ்பியரின் சரியான பிறந்த தேதி தெரியவில்லை.
ஆனால் இவர் ஏப்ரல் 26ம் தேதி திருமுழுக்குப் பெற்றார். 1616ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி
காலமானார் என்றும் குறிப்புகள் உள்ளன.