ஏப்ரல் 25, 2011. மங்களூர் மறைமாவட்டத்தின் இந்துக் கோவில் ஒன்றைப் புதுப்பிக்கவும்
அதன் திருவிழாவிற்கெனத் தாயரிக்கவும் உதவ அப்பகுதி கத்தோலிக்கர்கள் முன்வந்துள்ளனர். மங்களூரின்
நராவியிலுள்ள சூரிய நாராயண கோவிலின் இவ்வாண்டுத் திருவிழாவிற்கு முன்னர் அதனைப் புதுப்பிப்பதில்
ஈடுபட்ட 250 பேரில் 150 பேர் கத்தோலிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரு மதங்களின்
சமூகங்களிடையே ஐக்கியத்தையும் சகோதரத்துவ உணர்வையும் காண்பது மகிழ்ச்சி தருவதாக உள்ளது
என்ற நராவி பங்குக்குரு லூயிஸ் குட்டின்ஹா, கிறிஸ்தவர்கள் அண்மைக் காலங்களில் தாக்கப்பட்டு
வரும் சூழலில் மதங்களிடையேயான இத்தகைய நல் உறவுகள் வரவேற்கப்படவேண்டியவை என்றார்.