புனித பூமியில் கிறிஸ்துவின் உயிர்ப்பு மகிழ்ச்சியோடு சோகமும் கலந்துள்ளது- கிறிஸ்தவ
சபைகளின் தலைவர்கள் கவலை
ஏப்ரல்20,2011. இயேசுவின் திருச்சிலுவை காலியாகவும் அதன் மூலம் நமக்குப் புதுவாழ்வு
வந்திருக்கின்ற போதிலும் கிறிஸ்துவின் உயிர்ப்பு மகிழ்ச்சியோடு சோகமும் சேர்ந்து வருகின்றது
என்று புனித பூமியின் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். புனித பூமியின்
13 கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாச்
செய்தியில் தற்போது அராபிய உலகில் இடம் பெற்று வரும் போராட்ட அலைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளனர். நம்
ஆண்டவர் அனைத்து விசுவாசிகளுக்கும் உறுதியளித்துள்ள நித்திய வாழ்வின் நம்பிக்கையில் கிறிஸ்தவர்கள்
தங்கள் மகிழ்ச்சியைக் கண்டடைகிறார்கள் என்றுரைக்கும் அச்செய்தி, மீட்பின் நகரமான எருசலேமில்
இருக்கும் நாம், இப்பகுதியின் எகிப்து, ஈராக் மற்றும் பிற இடங்களில் துன்புறும் நம் கிறிஸ்தவ
சகோதர சகோதரிகளை நோக்கும் போது நமது மகிழ்ச்சி சோகமாக மாறுகின்றது என்று தெரிவிக்கிறது. மௌனமாக்கப்படும்
மக்களுக்காகக் குரல் கொடுப்பதில் தங்களோடு உலகின் அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒன்றிணையுமாறும்
புனித பூமிக் கிறிஸ்தவத் தலைவர்கள் அச்செய்தியில் கேட்டுள்ளனர்.