இலங்கை - உயிரிழப்பு மதிப்பீடுகளை புறந்தள்ள முடியாது: ஐ.நா.
ஏப்ரல்20,2011. இலங்கையில் இடம் பெற்ற இறுதிக்கட்டப் போரில் பொதுமக்கள் நாற்பதாயிரம்
பேர் வரைக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற மதிப்பீடுகளைத் தற்போதைக்குப் புறந்தள்ள முடியாது
என ஊடகங்களில் கசிந்துள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தெரிவிக்கிறது. இலங்கையின் இறுதிக்கட்டப்
போர் குறித்த ஐ.நா. நிபுணர் குழுவின் முழுமையான அறிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல்
இருக்கும்வேளை, அந்த அறிக்கையின் சில பகுதிகள் கசிந்துள்ளதாகக் கூறி இலங்கையிலுள்ள நாளிதழ்கள்,
குறிப்பாக அரசு சார்பு செய்தி நாளிதழ்கள் கட்டம் கட்டமாக அவ்வறிக்கையின் தகவல்களை வெளியிட்டு
வருகின்றன. இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன என்றாலும், இறுதிப்
போரில் கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படக் கூற முடியாது இருக்கின்றது.
ஆயினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாற்பதாயிரம் பேர் என்று பல்வேறு வழிகளிலும் கிடைத்த
தகவல்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையை நிராகரித்துவிட முடியாது என்று ஐ.நா.
சுட்டிக்காட்டியுள்ளது.