பெய்ஜிங் இல்லச் சபையின் முப்பது உறுப்பினர்கள் கைது
ஏப்ரல்19,2011 சீனாவில் பொது இடத்தில் ஞாயிறு திருவழிபாடு நடத்த முயற்சித்த பெய்ஜிங்
இல்லக் கிறிஸ்தவ சபையின் இரண்டு போதகர்கள் மற்றும் அச்சபையின் முப்பது உறுப்பினர்கள்
கைது செய்யப்பட்டார்கள் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டை மையமாகக் கொண்ட சைனா எய்ட் என்ற
மனித உரிமைகள் அமைப்பு அறிவித்தது. போதகர்கள் Jin Tianming, Li Xiaobai ஆகிய இருவரும்
இச்சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள். மற்றவர்களும்
இத்திங்கள் மாலை விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் என்று அம்மனித உரிமைகள் அமைப்பு கூறியது. அக்கிறிஸ்தவ
சபையின் 169 பேர் பேருந்துகளில் ஏற்றப்பட்டு கேள்வி கேட்கப்பட்டனர் என்றும் இச்சபை பல
ஆண்டுகளாகத் தனது நடவடிக்கைகளைப் பொது இடங்களிலே நடத்துகின்றது என்றும் அரசிடம் பதிவுக்காக
அனுப்பிய மனு 2006ம் ஆண்டில் புறக்கணிக்கப்பட்டது என்றும் அவ்வமைப்பு குறை கூறியது.