சர்க்கஸ் உலக நாளையொட்டி திருப்பீடத்தின் குடியேற்றதாரருக்கான அவை வெளியிட்டுள்ள சிறப்புச்
செய்தி
ஏப்ரல் 15,2011. சர்க்கஸ் கேளிக்கைகளுக்கான உலக நாளையொட்டி திருப்பீடத்தின் குடியேற்றதாரருக்கான
அவை சிறப்புச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. மனித கலாச்சாரத்தின் ஒன்றிணைந்த ஒரு
பகுதியாக சர்க்கஸின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த உலக நாள்
இச்சனிக்கிழமை சிறப்பிக்கப்படுகிறது என்று இத்திருப்பீட அவையின் செய்தி கூறுகிறது. சர்க்கஸ்
என்பது ஒரு கல்வி புகட்டும் அமைப்பாக, குறிப்பாக, சிறார்களுக்குப் பங்காற்ற முடியும்
என்பதைத் திருச்சபை ஏற்றுக் கொள்கிறது எனக்கூறும் பேராயர் Antonio Mario Veglioவின் செய்தி,
சமூக வாழ்வுக்கும் படைப்பு மற்றும் கற்பனை வளத்திற்கும் சர்க்கஸ் வழங்கி வரும் ஊக்கத்தையும்
சுட்டிக் காட்டுகிறது.சர்க்கஸில் ஈடுபடும் அனைவரின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய கடமை
அனைத்து நாடுகளுக்கும் உள்ளது என்பதை எடுத்துரைக்கும் ஒரு நாளாக இவ்வுலக நாள் இருக்கும்
என்ற நம்பிக்கையையும் திருப்பீடத்தின் குடியேற்றதாரருக்கான அவையின் சிறப்புச் செய்தி
வெளியிட்டுள்ளது.