ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஐக்கிய நாட்டின் 16 வது குடியரசுத் தலைவர். இவர் அடிமை முறைக்கு
எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில்
தலைவராக இருந்த இவர் ரிப்பப்ளிக்கன் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின்
குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார். அமெரிக்க ஐக்கிய நாட்டைப் பிளவுபடாமல் காக்க, தென்
மாநிலப் பிரிவினைக் கருத்தாளர்களை எதிர்கொண்டு உள்நாட்டுப் போர் நடத்தி வெற்றி பெற்றவர்.
இவர் 1863ல் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து 1865 ல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தின்
வழி அடிமை முறையை ஒழித்தார். இவருடைய தலைவருக்கானப் பண்புகளை அறிய இவர் நடத்திய உள்நாட்டுப்
போர் மற்றும் அடிமை முறையை எதிர்த்து இவர் நாட்டு மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்தும் வகையில்
எழுப்பிய குரலும் முக்கியமானவை. “Gettysburg” சொற்பொழிவு எனப் புகழ்பெற்ற இவர் ஆற்றிய
உரை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. உள்நாட்டுப் போர் முடியும் தறுவாயில் தென் மாநிலங்களுடன்
இணக்கமான முறையில் அமெரிக்க ஒன்றியத்தை நிறுவ முயன்றார். இவர் அடிமை முறையை ஒழிப்பதில்
சிறிதளவும் தளர்வில்லாமல் உறுதியாக இருந்ததை ஒரு சிலர் கடுமையாகச் சாடினார்கள். ஆனால்
வேறு சிலர் இவர் போதிய விரைவுடன் அடிமை முறையை ஒழிக்கவில்லை என்றும், அடிமை முறையைப்
போற்றிய தென் மாநிலங்களிடம் உள்நாட்டுப்போரின் இறுதியில் போதிய அளவு கடுமையாக நடந்துகொள்ளவில்லை
என்றும் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் 1865ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி இவர் வாஷிங்டன்
டி.சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார். 1809ம்
ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி பிறந்த ஆபிரகாம் லிங்கன், அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒற்றுமைக்காக
உயிர் துறந்து புகழ் எய்தினார்.