மெல்பர்ன் நகரில் நடைபெறும் மூன்றாவது தேசிய குடும்ப மாநாட்டிற்குத் திருத்தந்தை வழங்கிய
வீடியோ செய்தி
ஏப்ரல் 13, 2011. ஒவ்வொருவரின் தனிப்பட்டக் குடும்பங்களில் அன்புறவுகளை வளர்க்க முயற்சிகள்
எடுப்பதுபோல், இறைவனின் குடும்பமாகிய இந்த உலகச் சமுதாயத்திலும் அன்புறவுகளை வளர்க்க
முயல வேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக் கொண்டார். இப்புதன் பொது மறைபோதகத்தின்
இறுதியில், ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெறும் மூன்றாவது தேசிய குடும்ப மாநாட்டிற்கு
திருத்தந்தை வழங்கிய இச்செய்தி, அந்நாட்டிற்கு வீடியோ மூலம் ஒளிபரப்பப்பட்டது. அன்பின்
மூலம் உருவாகும் ஒரு புதிய கலாச்சாரத்தை இறைவனின் குடும்பமாகிய திருச்சபையிலும், இந்த
உலகிலும் வளர்ப்பது குடும்பத்தினர் ஒவ்வொருவரின் கடமை என்று திருத்தந்தை இச்செய்தியில்
வலியுறுத்தினார்.இந்த அன்பு சிறப்பாக இளையோருக்கும், நோயினால் துன்புறுவோருக்கும் அதிகமாக
வழங்கப்பட வேண்டுமென்று கூறிய திருத்தந்தை, மெல்பர்ன் மாநாட்டில் கூடியிருந்த அனைவருக்கும்
தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.