2011-04-09 16:27:36

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
"மரண வியாபாரி இறந்தான்" (“The Merchant of Death is Dead") என்ற தலைப்பில் 1888ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பத்திரிகையில் செய்தியொன்று வெளியானது. அந்தச் செய்தி யாரைக்குறித்து எழுதப்பட்டிருந்ததோ, அந்த 'வியாபாரி' அந்த நாளிதழை அன்று வாசித்தார். நம்முடைய இறப்புச் செய்தியை நாமே வாசிக்கும் வாய்ப்பு நம்மில் யாருக்கும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இந்த அனுபவத்தைப் பெற்றவர் ஆல்பிரட் நொபெல். அவரது சகோதரர் Ludvig Nobel இறந்ததைக் குறிப்பிடுவதற்குப் பதில் ஆல்பிரட் இறந்துவிட்டதாக பத்திரிகையில் தவறான செய்தி வெளியானது. ஆல்பிரட் அந்தச் செய்தியைத் தொடர்ந்து வாசித்தார். தன்னைப் பற்றி பத்திரிகை உலகம் என்ன நினைக்கிறது என்பதை அவர் தெரிந்து கொண்டார்.

ஆல்பிரட் நொபெல் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர் என்பதை நாம் அறிவோம். எனவே அவரைப் பற்றி வெளிவந்த செய்தி அவ்வளவு சிறப்பாக இல்லை. பல்லாயிரம் உயிர்களை கொன்று பணம் திரட்டும் ஒரு பயங்கர மனிதர் அவர் என்பதைச் செய்திகள் பல வடிவங்களில் சொல்லியிருந்தன.

நாம் இறந்தபின் நம்மைப் பற்றி சொல்லப்படும் கருத்துக்கள் நமது உண்மை நிலையைத் தோலுரித்துக் காட்டும். ஆல்பிரட் தன்னைப் பற்றிய மரணச் செய்தியைப் படித்ததால், அறிவொளி பெற்றார் என்றே சொல்லவேண்டும். வெடிமருந்தால் தான் சம்பாதித்த செல்வத்தை எல்லாம் நொபெல் விருதுகள் வழுங்கும் அறக்கட்டளையை நிறுவுவதற்கு அவர் அளித்தார். இந்த ஒரு செயலால் அவர் வரலாற்றில் இன்றும் வாழ்கிறார்.

வரலாற்றில் புகழ்பெற்ற பலர் தங்கள் கல்லறையில் எழுதக்கூடிய வாக்கியங்களைத் தாங்களே சொல்லிச் சென்றுள்ளனர். சரியாக 80 ஆண்டுகளுக்கு முன் 1931ம் ஆண்டு, இதே ஏப்ரல் மாதம் 10ம் தேதி இவ்வுலகிலிருந்து விடைபெற்ற புகழ்பெற்ற கவிஞர் கலீல் கிப்ரான் கல்லறையில் எழுதப்பட்டுள்ள வரிகள் இவை: “என் கல்லறையில் இந்த வார்த்தைகளை எழுதி வையுங்கள். நானும் உங்களைப் போல் உயிரோடுதான் இருக்கிறேன். உங்கள் அருகிலேயே நிற்கிறேன். கண்களை மூடி, சுற்றிலும் பாருங்கள்... உங்களுக்கு முன் நான் நிற்பதைக் காண்பீர்கள்.”

கல்லறை நமது முடிவல்ல, நமது வாழ்வு இன்னும் தொடர்கிறது என்பதை நமக்கு நினைவுபடுத்தும் ஒரு நற்செய்தியை இன்று நாம் கேட்கிறோம். இயேசு இலாசரைக் கல்லறையில் இருந்து உயிருடன் எழுப்பும் புதுமையை இன்று நற்செய்தியில் வாசிக்கிறோம் (யோவான் நற்செய்தி 11: 1-45). நாம் கடந்த இரு வாரங்களாய் சொன்னதுபோல், யோவான் நற்செய்தி வெறும் நிகழ்ச்சியை மட்டும் குறிப்பிடுவதில்லை. மாறாக, அந்நிகழ்ச்சி வழியாக, ஒரு இறையியல் பாடம் நமக்கு வழங்கப்படுகிறது.

இயேசு ஆற்றிய புதுமைகளிலேயே மிகப் புகழ்பெற்ற புதுமையாகக் கருதப்படுவது இயேசு இலாசரை உயிர்ப்பிக்கும் புதுமை. இறந்தவர்கள் பலரை இயேசு உயிர்ப்பித்திருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். நயீன் நகர விதவையின் மகன், யாயீர் என்ற தொழுகைக் கூடத்தலைவனின் மகள் என்று பலரை உயிர்ப்பித்திருக்கிறார். ஆனால், இலாசரை உயிர்ப்பித்ததில் ஒரு தனி சிறப்பு உண்டு. மற்றவர்கள் இறந்த உடனேயே இயேசு அங்கு பிரசன்னமாகி அவர்களைச் சாவினின்று மீட்டார். இலாசரையோ நான்காம் நாள் உயிர்ப்பித்தார்.

இறந்த ஒருவரின் ஆன்மா அவருடன் கல்லறையில் மூன்று நாட்கள் இருக்கும், மூன்றாம் நாள் அந்த ஆன்மா உடலிலிருந்து நிரந்தரமாக பிரிந்து விடும், அதன் பின்னர் அந்த உடல் அழுகிப் போக, அழிந்து போக ஆரம்பிக்கும்... இதுவே யூதர்கள் மத்தியில் நிலவி வந்த நம்பிக்கை. இலாசர் இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. எனவே அவரது உடல் அழிய ஆரம்பித்திருக்கும். அந்த நேரத்தில் இயேசு அங்கு வந்து சேர்ந்தார். தாமதமாக வந்த இயேசுவைக் கண்டு மார்த்தா, மரியா என்ற இரு சகோதரிகளும் ஒருவகையில் ஆறுதல் அடைந்தாலும், "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்." (யோவான் 11: 21,32) என்ற தங்கள் ஆதங்கத்தையும், ஏக்கத்தையும் சொல்கின்றனர்.

வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் இறைவன் தாமதிப்பதாக எத்தனை முறை நாம் உணர்ந்திருக்கிறோம். எதிர்பார்க்கும் நேரத்தில், எதிர்பார்க்கும் விதத்தில், எதிர்பார்க்கும் இடத்தில் கடவுள் வருவதில்லை. எதிர்பாராத வகையில் நம் வாழ்வில் நுழைவதுதான் கடவுளின் அழகு. தாமதமாய் வந்த இயேசுவிடம் தன் ஆதங்கத்தைக் கூறிய மார்த்தா, உடனேயே இயேசுவின் மீது தான் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும் எடுத்துரைத்தார்.
யோவான் நற்செய்தி 11: 21-22 மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும் என்றார்.
மார்த்தாவின் இந்த நம்பிக்கை அவருக்குப் பின் வந்த பலருக்கு வழி காட்டியது.

இயேசு இலாசரைக் கல்லறையிலிருந்து எழுப்பிய இந்தப் புதுமை ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்த ஆதி கிறிஸ்தவர்களது நம்பிக்கையை வளர்ப்பதற்கு பெரிதும் உதவியது என்று விவிலிய ஆய்வாளர்களும், திருச்சபை வரலாற்று அறிஞர்களும் சொல்கின்றனர். ஆதி கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை நாம் அறிவோம். அடுத்த நாள், அடுத்த மணி நேரம் உயிருடன் இருப்போமா என்ற கேள்வி இவர்கள் கழுத்தைச் சுற்றிக் கொண்ட ஒரு கருநாகத்தைப் போல் எப்போதும் இவர்களை நெருக்கிக் கொண்டே இருந்தது. இறந்து, புதையுண்டு, அழிந்து போன தங்களையும், தங்கள் திருச்சபையையும் கல்லறைகளை விட்டு உயிருடன் வெளியே கொண்டுவருவார் இறைவன் என்ற நம்பிக்கையை வளர்க்க இலாசர் புதுமை உதவியது.

இதே எண்ணங்களை இன்றைய முதல் வாசகமும் நமக்குச் சொல்கிறது. பாபிலோனிய அடிமைத் தனத்தில் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருந்த இஸ்ரயேல் மக்களை கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்று எசேக்கியேல் இறைவாக்கினர் கூறுகிறார். எலும்புக்கூடுகள் பரவிக் கிடந்த ஒரு நிலத்தில் இறைவனின் ஆவி வீசியபோது, அந்த எலும்புக்கூடுகள் படிப்படியாக தசையும், தோலும் பெற்று உயிருள்ள மனிதர்களாய், ஒரு பெரும் படையாய் எழுந்த அற்புத காட்சியை 37ம் பிரிவில், முதல் 11 திருவசனங்களில் விவரிக்கும் இறைவாக்கினர், அதைத் தொடர்ந்து இன்றைய வாசகத்தில் நாம் கேட்கும் ஆறுதலும், நம்பிக்கையும் தரும் இந்த வார்த்தைகளைக் கூறுகிறார்.

இறைவாக்கினர் எசேக்கியேல் 37 12-14
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.

உயிரற்ற பிணமோ, உருவும், உணர்வுமற்ற களிமண்ணோ, கடவுள் கைபட்டால் புதுமைகளாய் மாறும். ஆனால், இந்தப் புதுமை நிகழ்வதற்கு கடவுள் இருந்தால் மட்டும் போதாது. நாமும் அவரோடு ஒத்துழைக்க வேண்டும் என இறைவன் விரும்புகிறார். “இப்போதுகூட (அதாவது, நம்பிக்கையற்ற இச்சூழலிலும் கூட) நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும் என்று மார்த்தா கூறிய அந்த நம்பிக்கை வரிகளில் இந்த ஒத்துழைப்பு ஆரம்பமானது. இயேசு இதே நம்பிக்கையை, ஒத்துழைப்பை இலாசர் கல்லறையைச் சுற்றி நின்றவர்களிடமும் உருவாக்க நினைத்தார். எனவே, மூன்று கட்டளைகள் இடுகிறார். முதல் கட்டளை அங்கிருந்த யூதர்களுக்கு.

"கல்லறை வாயிலை மூடியிருக்கும் கல்லை அகற்றுங்கள்." இது இயேசு வழங்கிய முதல் கட்டளை. "கல்லே அகன்று போ." என்று இயேசு சொல்லியிருந்தால், ஏன் நினைத்திருந்தாலே போதும்.. அந்தக் கல் அகன்று போயிருக்கும். அவரது உயிர்ப்பின் போது இயேசுவின் கல்லறையைத் தேடி வந்த பெண்கள் அந்தக் கல்லை யார் நமக்கு அகற்றுவார்கள் என்று பேசிக் கொண்டு வந்த போது, (மாற்கு நற்செய்தி 16: 3) ஏற்கனவே கல் அகற்றப்பட்டிருந்ததல்லவா? அதே போல், இயேசு இங்கும் தன் வல்லமையால் கல்லறையின் கல்லை அகற்றியிருந்தால், சூழ நின்றிருந்தவர்கள் அவரை இன்னும் அதிகம் நம்பியிருப்பார்கள். இந்தப் புதுமைக்கு இன்னும் அதிக மெருகு கூடியிருக்கும்... இப்படி எண்ணத் தோன்றுகிறது எனக்கு.

இயேசுவின் எண்ணங்களுக்கும், நமது எண்ணங்களுக்கும் அதுதான் வேறுபாடு. இயேசு புதுமைகள் செய்தது தன் வலிமையை, கடவுள் தன்மையைக் காட்சிப்பொருளாக்க அல்ல. புதுமைகளின் வழியே மக்களின் மனங்களில், வாழ்வில் மாற்றங்கள் உண்டாக்க வேண்டும் என்பதே அவர் எண்ணம். அந்தக் கல்லறையைச் சுற்றி நின்றவர்கள் நான்காம் நாளில் ஒன்றும் நடக்காது என்ற அவநம்பிக்கையுடன் அஙகு வந்தவர்கள். இயேசு அவர்களது அந்த அவநம்பிக்கையை உடைக்க விரும்பினார். நான்கு நாட்கள் என்ன, நாலாயிரம் வருடங்கள் ஆனாலும் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்பினார்.

கல்லறையிலிருந்து இலாசரை உயிரோடு எழுப்ப அந்த மக்களுக்கு சக்தி இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்தக் கல்லறைக் கல்லை அகற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு என்று இயேசுவுக்குத் தெரியும். எனவே, மனிதர்களால் முடிந்தவைகளை மனிதர்களே செய்யட்டும் என்று இயேசு இந்தக் கட்டளையைத் தருகிறார். நம்மால் முடிந்ததை நாமே செய்வதைத்தான் இறைவன் விரும்புகிறார்.

நம் வீடுகளில் நடக்கும் ஒரு அழகான நிகழ்ச்சியை உங்களுக்கு இங்கு நினைவுறுத்த விரும்புகிறேன். நாலு காலில் தவழும் குழந்தைகள் முதல் முறையாகத் தட்டுத் தடுமாறி எழுந்து நடக்கும் அனுபவம் நம் குடும்பங்களில் மகிழ்வான ஒரு நிகழ்வு. குழந்தை கீழே விழுந்து அழுவதும் இந்த மகிழ்வின் ஒரு பகுதி. கீழே விழும் குழந்தையைத் தூக்கி விட்டு, மீண்டும் அக்குழந்தையை நடக்கச் சொல்லி பெற்றோர் தூண்டுவார்கள். அதற்கு பதில், குழந்தை விழுந்துவிட்டதென பரிதாபப்பட்டு, தாயோ, தந்தையோ, குழந்தையைத் தூக்கிச் சுமந்தால், குழந்தை நடை பழகவே பழகாது. அதுபோலத்தான் கடவுளும். நம்மால் இயன்றதை நாம் செய்யவேண்டும் என்று விரும்புகிறார்.

இயேசு அங்கிருந்தவர்களிடம் கல்லறையை மூடியிருந்த கல்லை அகற்றச் சொன்னார். கல்லை நகர்த்துவதில் மற்றொரு பிரச்சனை இருந்தது. அதை மார்த்தா நேரடியாகவே இயேசுவிடம் கூறுகிறார். நான்கு நாட்கள் ஆகிவிட்டன. நாற்றம் எடுக்குமே என்ற பிரச்சனை. மார்த்தா இறந்த காலத்தில் வாழ்ந்தார். இயேசு அவரை நிகழ் காலத்திற்கு, எதிர் காலத்திற்கு அழைத்தார். இறந்த காலம் அழிந்து, அழுகி நாற்றம் எடுக்கும். அங்கேயே இருப்பது நல்லதல்ல. அந்த இறந்த காலத்தை மூடியிருப்பது பெரும் கல்லானாலும், மலையே ஆனாலும், அதை அகற்றி, அடுத்த அடி எடுத்துவைக்க இயேசு அழைக்கிறார்.

இயேசு கொடுத்த இரண்டாவது கட்டளை இலாசருக்கு: "இலாசரே, வெளியே வா." இறந்த பிணமாய், கட்டுண்டு கிடந்த இலாசர் இயேசுவின் குரல் கேட்டு, கட்டுகளோடு வெளியே வந்தார். எல்லாம் முடிந்து விட்டது, அழிந்து விட்டது என்று புதைக்கப்பட்டுள்ள நம் கனவுகளும் கடவுளின் குரல் கேட்டால் மீண்டும் உயிர் பெறும். இறைவனின் குரல் கேட்டும் கல்லறைகளில் தங்களையே மூடிக் கொள்ளும் பலரை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கலாம்.

பழங்காலத்தில் வாழ்ந்த ஓர் அரசனைப் பற்றிய ஒரு பயங்கரமான கதை இது. கொஞ்சம் அருவருப்பூட்டும் கதை என்றாலும், சொல்லியாக வேண்டும். ஏனெனில் இங்கு ஒரு நல்ல பாடம் நமக்குக் காத்திருக்கிறது. இந்த அரசன் பல பயங்கரமான சித்திரவதைகளைக் கண்டுபிடித்தவன். அவற்றை மக்கள் மேல் திணித்தவன். அந்தச் சித்ரவதைகளில் ஒன்று இது: மரண தண்டனை பெற்ற குற்றவாளியை ஒரு பிணத்தோடு கட்டி விடுவார்கள். அதுவும் முகத்துக்கு நேர் முகம் வைத்து, குற்றவாளியையும், பிணத்தையும் சிறிதும் அசையமுடியாத வண்ணம் கட்டி, ஒரு இருண்ட குகையில் தள்ளி விடுவார்கள். குற்றவாளி அந்த பிணத்தோடு தன் எஞ்சிய வாழ்நாட்களைக் கழிக்க வேண்டும். இதற்கு மேல் இந்த தண்டனையை நான் விவரிக்க விரும்பவில்லை.
அதிர்ச்சியூட்டும், அருவருப்பூட்டும் இந்தச் சித்ரவதையை நம்மில் பலர் நமக்கேத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இறந்த காலம், பழைய காயங்கள் என்ற பிணங்களைச் சுமந்து வாழும் எத்தனை பேரை நாம் அறிவோம். அல்லது, எத்தனை முறை இது போல் பிணங்களுடன், இருளில் நாம் வாழ்ந்திருக்கிறோம். நாமாகவே நமக்கு விதித்துக்கொண்ட இந்தச் சித்திரவதைகளிலிருந்து, இந்த இருளான கல்லறைகளிலிருந்து மீண்டும் வெளிவர தவக்காலமும், இன்றைய நற்செய்தியும் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. நமது கல்லறைகளிலிருந்து வெளியேறுவோம்.

வெளியே வரும் இலாசரைக் கண்டதும், இயேசு மீண்டும் மக்களுக்குத் தரும் மூன்றாவது கட்டளை: "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்." உயிர் பெற்று வந்துள்ள இலாசரால் தன் கட்டுகளைத் தானே அவிழ்த்துக் கொள்ள முடியாது. அந்த நல்ல காரியத்தை அவரைச் சுற்றி இருப்பவர்களே செய்யமுடியும். நடை பிணங்களாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஒருவேளை, அந்த நிலையில் நாமும் அவ்வப்போது இருந்திருக்கிறோம். இந்த நடை பிணங்களைக் கட்டியிருக்கும் கட்டுகளை அவிழ்க்க இறைவன் நமக்கு கட்டளைகள் இடுகிறார்.
இறந்தகாலக் காயங்களைச் சுமந்து இறந்து கொண்டிருக்கும் நம்மைக் கல்லறைகளிலிருந்து இறைவன் வெளிக் கொணர வேண்டும் என்று மன்றாடுவோம். கல்லறைகளை விட்டு வெளியேறும் பலரது கட்டுகளை அவிழ்த்து, அவர்களை விடுவிக்கும் பணியில் இன்னும் ஆர்வமாய் ஈடுபடவும் இறையருளை இறைஞ்சுவோம்.







All the contents on this site are copyrighted ©.