புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் விசுவாசிகளின் வெகுஜன வழிபாடுகள் புறக்கணிக்கப்படக்
கூடாது - திருத்தந்தை
ஏப்ரல்08,2011. இலத்தீன் அமெரிக்க நாடுகளில் எடுக்கப்பட்டு வரும் புதிய நற்செய்தி அறிவிப்பு
நடவடிக்கைகளில் விசுவாசிகளின் வெகுஜன வழிபாடுகள் புறக்கணிக்கப்படக் கூடாது என்று திருத்தந்தை
16ம் பெனடிக்ட் கூறினார். இந்த வழிபாடுகள் சரியான பாதையில் வழிநடத்தப்பட்டால், கடவுளோடு
ஆழமான உறவு, திருநற்கருணை ஆராதனை, அன்னைமரியா மீதான பக்தி, திருத்தந்தை மற்றும் திருச்சபையில்
ஈடுபாடு போன்றவைகளில் விசுவாசிகள் வளருவதற்கு அவை உதவும் என்றும் திருத்தந்தை கூறினார். திருப்பீட
இலத்தீன் அமெரிக்க அவை வத்திக்கானில் இவ்வெள்ளிக்கிழமை நிறைவு செய்த நான்கு நாள் கூட்டத்தில்
கலந்து கொண்ட சுமார் ஐம்பது பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு
கூறினார். விசுவாசிகளின் வெகுஜன வழிபாடுகளில் வெளிப்படுத்தப்படும் விசுவாசம், திருவழிபாட்டு
ஆண்டின் பெரிய திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களோடு தொடர்புடையதாக இருக்கின்றது என்றும்
உரைத்தார் திருத்தந்தை. இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் இருக்கின்ற
எண்ணற்ற திருத்தலங்கள், இயேசுவின் குழந்தைப்பருவம், அவரின் பாடுகள் மரணம் உயிர்ப்பு ஆகியவற்றுக்கும்
அன்னைமரியாவுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது பற்றிக் குறிப்பிட்ட அவர், வெகுஜன வழிபாடுகள்
அக்கண்டத்தின் கலாச்சாரத்தை மட்டும் வெளிப்படுத்துகின்றன என்பதோடு நிறுத்தப்பட்டுவிடக்
கூடாது என்றும் தெரிவித்தார். இலத்தீன் அமெரிக்காவில் இறைவார்த்தையை வாசித்துத் தியானிக்கும்
lectio divina வளர்ந்து வருவதையும், அது மக்களின் ஆன்மீக வாழ்வுக்கு உதவி வருவதையும்
திருத்தந்தை குறிப்பிட்டு அதற்குத் தலத்திருச்சபைகள் எடுத்து வரும் முயற்சிகளைப் பாரா்டடினார்