ஏப்ரல்08,2011. இந்திய ஆசிரியர்களின் பணி சிங்கப்பூரில் அதிகமாகத் தேவைப்படுவதாக அந்நாட்டின்
கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு இந்திய மொழிகள் மட்டுமல்லாது பிற
பாடத்திட்டங்களுக்குமானத் தேவையும் காரணமாகும் என்று சிங்கப்பூர் கல்வி நிறுவனத்தைச்
சேர்ந்த பெலிண்டா சார்லஸ் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் கல்வி நிறுவனம் மற்றும்
கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட அகாடமி ஆப் புரொபசனல் எக்சலன்ஸ் அமைப்பும் இணைந்து திறமைவாய்ந்த
ஆசிரியர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். இதன்படி
கடந்த 2006-ல் எட்டு ஆசிரியர்கள், 2007 முதல் 2009 வரை 30 ஆசிரியர்கள் என சிங்கப்பூரில்
பணியாற்றி வந்துள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டில் இந்திய ஆசிரியர்களின் எண்ணிக்கை 25 ஆக
இருந்தது. பெரும்பாலான இந்திய ஆசிரியர்கள் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்களாவர். சிங்கப்பூரில்
பொதுவாக பொருளாதாரம் போன்ற பாடங்களைச் சொல்லித் தருவதில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி
வருவது குறிப்பிடத்தக்கது.