2011-04-04 15:12:58

வாரம் ஓர் அலசல் - “தனி நபர் பெற்றால் வெற்றி, பலர் இணைந்தால் சாதனை”


ஏப்.04,2011. 1983ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி சனிக்கிழமை இந்தியா, கிரிக்கெட் உலகக் கோப்பையை முதன் முதலாக வென்றது. அதே ஏப்ரல் 2ம் தேதி அதே சனிக்கிழமை. ஆனால் ஆண்டு 2011. தாய்மண்ணில் விளையாடும் இந்தியா அதே கோப்பையை மீண்டும் பெற வேண்டுமே என்ற எதிர்பார்ப்பில் மும்பை வான்கேடே மைதானத்தில் ஆயிரம் ரூபாய் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை அனுமதிச் சீட்டுகள் வாங்கி கிரிகெட் இரசிகர்கள் அமர்ந்திருந்தனர். இலங்கையும் இந்தியாவும் ஆடிய இந்த பரபரப்பான இறுதித் தொடரில் தங்கள் தங்கள் நாடு உலகக் கோப்பையைக் கைப்பற்ற வேண்டுமென்று இரண்டு நாடுகளிலுமே பலர் தீவிரமாகச் செபம் செய்தனர். சிலர் நோன்பிருந்துகூடச் செபித்தனர். இவ்விரு அணிகளுமே முன்னாள் உலகச் சாம்பியன்கள் என்பதால் ஆட்டத்தின் முடிவு குறித்து அறிய அனைவருமே ஆவலாக இருந்தனர். இதில் இந்தியா அபார வெற்றி பெற்று உலக கோப்பையைக் கைப்பற்றியது. இந்தியாவின் 28 வருட கனவும் நிறைவேறியது. உலக கோப்பைத் தொடரை நடத்திய நாடுகள் அந்தக் கோப்பையை வென்றதில்லை என்ற கருத்தை இந்திய அணி முதல் முறையாக முறியடித்தது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டில் செய்துள்ள சாதனைகளைக் கௌரவிக்கும் விதமாக இந்திய அணி இந்தக் கோப்பையை டெண்டுல்கர்க்கு அர்ப்பணித்து இவ்வெற்றியைக் கொண்டாடி வருகிறது.
உலகில் மனிதர் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இரண்டு சாலைகள் இருக்கின்றன. ஒன்று அன்பு. மற்றொன்று சாதனை. ஆயினும் இந்தச் சாதனையைச் சாதிப்பதற்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது. அதற்குக் கடினமான உழைப்பும் முயற்சியும் தேவை. ஆபிரகாம் லிங்கன் சொன்னார்- ஒரு சிலர் பெரிய பெரிய சாதனைகளைப் படைத்துள்ளார்கள் என்றால், மற்றவர்களும் அவ்வாறு சாதனை படைக்க முடியும் என்பதற்கு அவர்கள் ஆதாரமாக இருக்கிறார்கள் என்று. கடந்த வாரத்தில் சென்னையில் சுரேஷ் என்ற மருத்துவர் வெளியிட்டுள்ள கண்டுபிடிப்பு நம்மைப் பிரமிக்க வைக்கிறது. இன்று மக்களைப் புதிது புதிதாக நோய்கள் பல தாக்கி வருகின்றன. மருத்துவர்களும் அவற்றைக் குணமாக்குவதற்கான ஆராய்ச்சிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளனர். பொதுவாக, எந்த ஒரு நோயும் அது தாக்கிய பிறகுதான் அதை நிவர்த்தி செய்வதற்கு மருத்துவர்கள் போராடுகிறார்கள். ஆனால் ஒரு நோய் வரப்போகிறது என்பதை முன்கூட்டியே கண்டுபிடித்து அதனைத் தடுக்க முடிந்தால், அதுவும் குழந்தையாக இருக்கும்போதே, எதிர்கால நோய்களைக் கண்டறிந்து தடுத்துவிட்டால், வாழ்க்கை சுலபமாக இருக்கும் அல்லவா!
ஆம். “நான்கு சொட்டு இரத்தத்தின் மூலம் நாற்பது வகையான எதிர்காலப் பாதிப்புகளைக் கண்டறிய முடியும்!''. மருத்துவர் சுரேஷ் இவ்வாறு சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார் என்று பத்திரிகையில் வாசித்தோம். இவர் சென்னை, மெடிஸ்கேன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதிர் கரு பாதுகாப்பு ஆய்வு அறக்கட்டளை என்ற அரசு சாரா நிறுவனத்தின் இயக்குநர். இவர் தனது கண்டுபிடிப்புப் பற்றி விளக்கியிருக்கிறார். குழந்தை பிறந்து 72 மணி நேரத்துக்குப் பிறகு, இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இதற்கு 'நியூ பார்ன் ஸ்கிரீனிங்’ என்று பெயர். குழந்தையின் உட்பாதத்தில் இருந்து இரத்தம் எடுக்கப்படும். மற்ற இடங்களைவிட உட்பாதத்தில் சதை நிறைய இருப்பதால் எலும்பு அல்லது நரம்புகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பொதுவாக ஐந்து வகையான பாதிப்புகள் இருக்கின்றன. கான்ஜெனிட்டல் ஹைபோ தைராய்டிஸம் (Congenital Hypothyroidism), கான்ஜெனிட்டல் அட்ரினல் ஹைபர்ப்லாசியா (Congenital adrenal hyperplasia), GBD (Global Burden of Disease), சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் (Cystic fibrosis), காலக்டோசீமியா (Galactosemia) ஆகியவையே அந்தப் பாதிப்புகள். இவற்றில் முதல் இரண்டு வகைப் பாதிப்புகள் தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கின்றன. கான்ஜெனிட்டல் ஹைபோ தைராய்டிஸம் பாதிப்புடன் பிறந்த குழந்தைக்கு தைராய்டு சுரப்பிகள் வேலை செய்யாமல் போகலாம். இதைத்தான் தைராய்டு சுரப்புக் குறை (ஹைபோ தைராய்டிஸம்) என்கிறோம். அயோடின் உள்ள ஹார்மோன்களின் வளர்ச்சியை முறைப்படுத்தவும், மூளை வளர்ச்சிக்கும் மற்றும் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிஸம்) ஆகியவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது இந்தத் தைராய்டு சுரப்பிதான். இது வேலை செய்யாமல் போனால், உடல் மற்றும் மூளை வளர்ச்சி தடைபட்டுப் போகும். உலக அளவில் நான்காயிரத்தில் ஒரு குழந்தைக்கு இந்தப் பாதிப்பு இருக்கிறது. ஆனால் இந்தியாவில், குறிப்பாக எழும்பூர் மருத்துவமனையில் நாங்கள் பரிசோதனை நடத்தியபோது, ஆயிரத்தில் மூன்று குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது என்று சொல்லியிருக்கிறார்.
புத்திசாலி, சல்லடையில் கூடத் தண்ணீரை எடுத்துச் செல்வான் என்பார்கள். அமெரிக்க ஐக்கிய நாட்டில் Jacob Barnett என்ற 12 வயதுச் சிறுவன் பற்றியும் கடந்த வாரத்தில் ஒரு செய்தி வாசித்தோம். அதே வயதுடைய மற்ற சிறுவர்கள் போல இவனும் நண்பர்களோடு விளையாடுகிறான், கிட்டார் வாசிக்கிறான். ஆனால் இவனது IQ அறிவுத்திறன் மட்டும் 170 ஆக உயர்ந்து இருக்கின்றது. மூன்று வயதிலே 5,000 குறுக்கெழுத்துப் போட்டிகளில் கலந்து கொண்டு பெரியவர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளான். அதற்கும் சில ஆண்டுகளிலே Calculus, algebra, geometry போன்ற கணிதப் பாடங்களை இரண்டு வாரங்களில் கற்று விட்டான் RealAudioMP3 . எட்டு வயதில் உயர்நிலைப்பள்ளியை முடித்து தற்போது கல்லூரிப் படிப்பில், வான்கோளங்களின் இயற்பியல் வேதியியல் பண்புகளை ஆராயும் வான்கோளவியல் (astrophysics) ஆராய்ச்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்கிறான். அதேநேரம் தனது பழைய சக மாணவர்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுக்கிறான். Indiana பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யும் வேலையும் இவனுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த அண்டம் உருவானது குறித்த Big Bang கோட்பாடுகளிலும் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளான். பெரிய பெரிய அறிவியலாளர்கள் வியக்கும் அளவுக்கு இவனது கேள்விகள் இருக்கின்றன என்று ஊடகம் ஒன்றில் வாசித்தோம். 1921ல் நொபெல் பரிசு பெற்ற அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் (Albert Einstein) குவாண்டம் இயற்பியல் குறித்த கோட்பாடுகளின் சில முக்கிய கூறுகள் குறித்தும் ஜேக்கப் கேள்விகள் கேட்கிறான் என்று சொல்கிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளரான ஐன்ஸ்டீன் வேலை செய்த Princeton பல்கலைகழகப் பேராசிரியராக இருப்பவர் Scott Tremaine. இவர், இந்தச் சிறுவனின் குடும்பத்துக்கு எழுதிய மின்னஞ்சலில், “ஜேக் (Jake) ஈடுபட்டுள்ள வான்கோளவியல் மற்றும் இயற்பியல் குறித்த ஆராய்ச்சி மிகவும் கடினமானது. இதில் வெற்றி காண்பவர்களுக்கு நொபெல் விருது கிடைக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் சிறுவன் ஜேக்கின் அபாரத் திறமை பற்றி இப்படி இன்னும் பல சொல்லப்பட்டுள்ளன. RealAudioMP3
“தனி நபர் பெற்றால் வெற்றி, பலர் இணைந்தால் சாதனை” என்பார்கள். எல்லாத் துறைகளிலுமே வயது வரம்பின்றி சாதனைகள் வெளிவந்து கொண்டேதான் இருக்கின்றன. உலகில் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் சாதனைகள் இடம் பெற்றிருக்கின்றன என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கடந்த வாரத்தில் கூறியுள்ளார். இந்நோய்க் கிருமிகள் மனிதரைத் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டு முப்பது ஆண்டுகள் ஆகின்றன. 2001க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்நோய்க் கிருமிகளால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 நாடுகளில் 25 விழுக்காடு குறைந்துள்ளது. இது ஒரு சாதனை. இது தொடர்ந்து இடம் பெற நாடுகளின் நிதி உதவி தேவை என்கிறார். RealAudioMP3
வாழ்க்கையில் வெற்றிச் சிகரத்தைத் தொடுபவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான் இருக்கின்றது. முந்தியவர்கள் இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கிப் பயணிக்கிறார்கள். பிந்தியவர்கள் இலக்கில்லாமல் அலைகிறார்கள் என்று ஒரு பெரியவர் சொன்னார். எடுத்துகாட்டாக, நான் இம்முறை தேர்வு எழுதுவேன் என்று ஒரு மாணவன் நினைத்தால் அது வெறும் ஆசையோடு நின்றுவிடும். அதேசமயம் நான் எல்லாப் பாடங்களிலும் 100க்கு 100 எடுப்பேன் என்று நினைத்துப் படித்தால் அது இலக்காக மாறி விடும். இந்த இலக்குகளை நிர்ணயிப்பதுகூட ஒரு கலை, எனவே இலக்குகளை அடைவதற்கு அவற்றுக்கான நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். இதோ சில நுணுக்கங்கள்.
1. முதலில் நீங்கள் அடைய விரும்பும் இலக்கைத் தெளிவாகத் தீர்மானித்தல்
2. இந்த இலக்கு எட்டக்கூடியதுதான் என்பதை முதலில் நீங்கள் நம்ப வேண்டும். அதில் ஒரு விழுக்காடுகூட சந்தேகம் இருக்கக்கூடாது. ஏனெனில் ஒரு காரியத்தில் இது கைகூடுமா கைகூடாதா என்று முதலிலே சந்தேகத்துடன் தொடங்கினால் அதை முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியாது.
3. மனதில் உருவாகிய இலக்கை ஒரு தாளில் எழுதி அதைத் தினமும் பார்வையில் படும்படியான இடத்தில் ஒட்டி வைத்து அந்தச் சிந்தனையை மனதில் ஆழப்பதியச் செய்ய வேண்டும்.
4. இந்த இலக்கை எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் எனச் சிந்தியுங்கள்.
5. உங்களது இலக்கைத் தீர்மானித்து விட்டீர்கள் என்றால் அது தேவைப்படுவதற்கானக் காரணத்தை இப்பொழுது சிந்தியுங்கள்.
6. ஒவ்வோர் இலட்சியத்திற்கும் ஓர் எல்லைக்கோடு அவசியம். அதாவது இரண்டு மாதங்களில் இரண்டு இலட்சங்களை சம்பாதிப்பேன் என்ற ஒரு வரையறை தேவை.
7. இந்த இலக்குப் பயணத்தில் எவ்வகையான தடைகள் வரும், அவற்றை எவ்வாறு சமாளிப்பீர்கள் என்பதையும் சிந்தியுங்கள்.
8. இந்தத் தடைகள் உங்களுக்கு வெளியேயிருந்து மட்டுமல்ல, உங்களுக்கு உள்ளேயும் இருக்கலாம். அதைக் கண்டுபிடித்துச் சரிசெய்யுங்கள்.
9. இந்த இலக்கை அடைய உண்மையிலேயே உதவி செய்பவர்கள் யார் என்று சிந்தியுங்கள்.
10. நல்ல திட்டமிடுதல் தேவை. இன்னும் ஒரு மாதத்தில் கார் ஓட்டப் பழகி விடுவேன். அடுத்து அதை வாங்குவதற்கு வங்கியில் கடன் கேட்பேன். மூன்றாவது மாதத்தில் கார் வாங்கி விடுவேன் என்று திட்டமிடல்.
ஆனால் அன்பர்களே, வாழ்க்கையில் எப்போதும் நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருக்க வேண்டும். நம்பிக்கையை இழந்தால் நீங்கள் நினைத்தது இலக்கே அல்ல என்று உறுதியாகச் சொல்ல முடியும். பெரும்பாலான மனிதர்களைப் பாதுகாத்து வாழ்க்கையில் நிற்க வைப்பது நம்பிக்கைதான். நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும் ஜன்னல்கள் வழிகாட்டும். ஆயினும் எவ்வளவு பெரிய சாதனயாளரும் கடவுளில் நம்பிக்கை வைத்துச் செயலில் இறங்கினால் மட்டுமே நினைத்ததைச் சாதிக்க முடியும்.










All the contents on this site are copyrighted ©.