2011-04-04 09:30:55

ஏப்ரல் 04 வாழ்ந்தவர் வழியில்.....


இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் 1855ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி பிறந்தவர் சுந்தரம் பிள்ளை. இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய சாத்திர நூல்களையும் கற்றார். 1877 இல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்ப் பள்ளியின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அப்பள்ளி பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார். பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வி துரையின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது. மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக நியமிக்கப்பட்டார். 1885 இல் டாக்டர் ஹார்வி துரை பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரம் பிள்ளையை தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார். அப்பணியை அவர் இறுதிவரையில் திறம்படச் செய்தார். திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையினைத் தோற்றுவித்து சமயத் தொண்டாற்றி வந்தார். இவருக்கு F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர் போன்ற பல பட்டங்கள் கிடைத்தன. புகழ்பெற்ற மனோன்மணீயம் என்ற நாடக நூலை 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். இதனால் இவர் மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை என அறியப்படுகிறார். இவரின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள். இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.
மனோன்மணீயத்தில் இடம் பெற்ற தமிழ்த் தெய்வ வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ் வணக்கப் பாடலாக ஜூன் 1970 இல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தனது 42வது வயதில் 1897ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி மறைந்தார். நூற்றொகை விளக்கம் (1888), மனோன்மணீயம் (நாடக நூல், 1891), திருவிதாங்கூர் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி ஆகிய நூல்கள் இவரது படைப்புக்களாகும்.







All the contents on this site are copyrighted ©.