2011-04-02 14:45:32

கர்தினால் விதயத்தில் மறைவு குறித்து இந்திய ஆயர்கள் இரங்கல் செய்தி


ஏப்.02,2011. கேரளாவின் சீரோ-மலபார் ரீதி கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான கர்தினால் மார் வர்கி விதயத்தில் (Varkey Vithayathil) இறைபதம் அடைந்ததையொட்டி இந்திய கத்தோலிக்க ஆயர்கள் தங்களது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.
கர்தினால் விதயத்தில், இவ்வெள்ளிக்கிழமை திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த போது மயக்கமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிற்பகல் 2 மணிக்கு மரணமடைந்தார்.
உலக இரட்சகர் சபையைச் சேர்ந்த கர்தினால் விதயத்தில், ஆழமான விசுவாச மனிதர், தைரியமான தலைவர் மற்றும் செப வாழ்வில் வேரூன்றியவர் என்று புகழ்ந்தார் இந்திய ஆயர்கள் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
இவரின் இறப்பு மூலம், சீரோ-மலபார் ரீதி கத்தோலிக்கத் திருச்சபையும் அகில இந்திய திருச்சபையும் ஓர் ஆழமான மற்றும் தைரியமான ஆன்மீகத் தலைவரை இழந்துள்ளது என்று இந்திய ஆயர்கள் பேரவையின் பொதுச் செயலர் பேராயர் ஆல்பர்ட் டி சூசா கூறினார்.
கர்தினால் விதயத்தில் அவர்களின் இறுதி அடக்கச்சடங்கு ஏப்ரல் 10ம் தேதி கொச்சினில் நடைபெறும்.
கர்தினால் விதயத்தில், கேரளாவின் பாரூரில் 1927ம் ஆண்டு மே 29ம் தேதி பிறந்தார். இவர் உலக இரட்சகர் துறவு சபையில் சேர்ந்து 1954ல் குருவாகத் திருநிலைபடுத்தப்பட்டார். 1996ல் பேராயராக நியமிக்கப்பட்ட இவர், 1999ல் எர்ணாகுளம் அங்கமாலி பேராயராகவும் சீரோ-மலபார் ரீதி கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2001ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டு, 2005ம் ஆண்டு வத்திக்கானில் நடைபெற்ற பாப்பிறைத் தேர்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கர்தினால் விதயத்தில். 2008 முதல் 2010 வரை இந்திய ஆயர் பேரவையின் தலைவராகவும் இவர் பணியாற்றினார்.
கர்தினால் விதயத்தில் அவர்களின் இறப்போடு இந்தியக் கர்தினால்களின் எண்ணிக்கை 5 ஆகவும் இவர்களில் 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 3 ஆகவும் மாறியது.
தற்சமயம் திருச்சபையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 200. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 116 ஆகும்.







All the contents on this site are copyrighted ©.