கர்தினால் Naguib: இசுலாமியமா? சனநாயகமா? ஆகிய இரண்டு நிலைப்பாடுகளை எகிப்து எதிர்நோக்குகிறது
ஏப்.01,2011: இசுலாமியமா? சனநாயகமா? ஆகிய இந்த இரண்டு நிலைப்பாடுகளில் எதைத் தேர்ந்தெடுப்பது
என்ற நிலையைத் தற்போது எகிப்து நாடு எதிர்நோக்குவதாக அந்நாட்டு முதுபெரும் தந்தை கர்தினால்
Antonios Naguib தெரிவித்தார். எகிப்தை முப்பது ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த ஹோஸ்னி
முபாரக் ஆட்சி கவிழ்ந்ததற்குப் பின்னர் அந்நாட்டின் நிலவரம் குறித்துப் பேட்டியளித்த
கர்தினால் Naguib, தற்சமயம் நாடு, சுதந்திரம், சம உரிமைகள், சனநாயகம் ஆகியவைகளை நோக்கிச்
செல்கின்றதா அல்லது இந்த விழுமியங்களுக்கு அச்சுறுத்தலாக இசுலாமிய நாடாக மாறும் நிலையில்
இருக்கின்றதா என்பதில் தெளிவில்லாமல் இருக்கின்றது என்றார். இந்த மார்ச் 19ம் தேதி
நடத்தப்பட்ட பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பில், சமய அடித்தளத்தினின்று அரசு நடவடிக்கைகளைப்
பிரித்துப் பார்ப்பதற்கு மக்களில் ஒருவித தயக்கம் தெரிவது வெளிப்பட்டுள்ளது.