டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி : லிபியப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் ஆப்ரிக்க
ஒன்றியம் நடுநிலை வகிக்க அழைப்பு
மார்ச்25,2011. வட ஆப்ரிக்க நாடான லிபியாவின் தற்போதைய வன்முறைப் பிரச்சனைக்குத் தீர்வு
காண்பதை ஆப்ரிக்க ஒன்றியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி
ஆயர் ஜொவான்னி மர்த்தினெல்லி பரிந்துரைத்தார். அமெரிக்க ஐக்கிய நாடு, பிரிட்டன் மற்றும்
பிரான்ஸ் தலைமையிலான ஐரோப்பியப் படைகள் இம்மாதம் 19ம் தேதியிலிருந்து நடத்தி வரும் குண்டு
வீச்சுத் தாக்குதல்களுக்குப் பின்னர் கருத்து தெரிவித்த ஆயர் மர்த்தினெல்லி, இந்தப் பிரச்சனைக்குத்
தீர்வு காண்பதில் ஆப்ரிக்க ஞானத்தில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார். குண்டுவீச்சுக்களால்
தீர்வு காண முடியும் என்ற ஐரோப்பியர்களின் எண்ணம் தவறானது என்று இவ்வியாழனன்று Fides
செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த ஆயர், லிபியப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் ஆப்ரிக்க
ஒன்றியம் நடுநிலை வகிக்க வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்றார். லிபியாவை கடந்த
42 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அதிபர் கடாபியின் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்தில்
கடந்த மாதம் அந்நாட்டில் மக்கள் கிளர்ச்சி தொடங்கியது.