2011-03-25 15:31:54

சீரோ மலங்கரா ரீதி ஆயர்கள், திருத்தந்தை சந்திப்பு


மார்ச்25,2011. சீரோ மலங்கரா ரீதி கத்தோலிக்கரின் திருவழிபாடு மற்றும் ஆன்மீக மரபுச் செல்வங்கள் மீது அந்த ரீதியின் அருட்பணியாளர்களும் விசுவாசிகளும் பற்றை வளர்ப்பதற்கு ஆயர்கள் தொடர்ந்து செயல்படுமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஆயர்கள் பாப்பிறையைச் சந்திக்கும் அட் லிமினா சந்திப்பையொட்டி கேரளாவின் சீரோ மலங்கரா ரீதியின் 13 ஆயர்களை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, பாரம்பரியமாகப் பெறப்பட்ட விசுவாசத்தை இறைவார்த்தை மற்றும் திருவருட்சாதனங்கள் வழியாக வளர்க்குமாறு வலியுறுத்தினார்.
இந்தியாவில் கலாச்சாரத்திற்கும் சமுதாயத்திற்கும் ஆன்மீகத்திற்கும் கிறிஸ்தவம் பெரும் பங்காற்றி வருகிறது என்பதைக் குறிப்பி்ட்டு, விசுவாசிகள், இறையன்பை அடித்தளமாகக் கொண்டு இறைவார்த்தையைப் போதிப்பதிலும் தோழமையை வளர்ப்பதிலும் தொடர்ந்து மணம் பரப்பட்டும் என்ற தனது ஆவலையும் வெளியிட்டார் திருத்தந்தை.
கேரளாவின் சீரோ மலங்கரா ரீதி ஆயர்களிடம், கிறிஸ்தவச் சமூகங்களின் முக்கியத்துவத்தை விளக்கி, மறைக்கல்வி மற்றும் விசுவாசத்தில் பயிற்சியளிக்கும் திட்டங்கள் மூலம் ஆயர்கள் அச்சமூகங்களைத் தங்களது வழிநடத்துதலில் வைக்குமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை







All the contents on this site are copyrighted ©.