2011-03-25 15:44:29

ஐ.நா.பொதுச் செயலர் : காசநோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு மேலும் நிதியுதவிகள் ஒதுக்கப்பட வேண்டும்


மார்ச்25,2011. காசநோயை ஒழிப்பதற்கான ஆராய்ச்சிகள், அந்நோயைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், அதற்கானச் சிகிச்சைகள் ஆகியவற்றுக்கு மேலும் நிதியுதவிகள் ஒதுக்கப்படாமல் இருந்தால், தற்போதிலிருந்து 2015ம் ஆண்டுக்குள் சுமார் எண்பது இலட்சம் பேர் அந்நோயால் இறக்கக்கூடும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் எச்சரித்துள்ளார்.
மார்ச் 24ம் தேதி கடைபிடிக்கப்பட்ட உலக காச நோய் தினத்தையொட்டி பான் கி மூன் வெளியிட்ட செய்தி இவ்வாறு கூறுகிறது.
இந்நோயை ஒழிப்பதற்கு உலக நலவாழ்வு நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக எடுத்து வரும் யுக்திகளினால் நான்கு கோடிக்கு மேற்பட்ட மக்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றுரைக்கும் அவரின் செய்தி, உலக சமுதாயம் தொடர்ந்து நிதியுதவி செய்து வந்தால் இந்நோயினால் இறப்போரின் எண்ணிக்கையையும் தொடர்ந்து குறைக்க முடியும் என்றும் கூறுகிறது.
இந்நோய் பரிசீலிக்கப்படாமல் தொடர்ந்து அது பரவுவதற்கு அனுமதிக்கப்பட்டால் இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை உலகம் திரும்பப் பெற வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டில் உலகில் 94 இலட்சம் பேர் காச நோயால் தாக்கப்பட்டனர். இவர்களில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட காச நோயாளிகள் உட்பட 17 இலட்சம் பேர் இறந்தனர்.
2011க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் இருபது இலட்சத்திற்கும் மேற்பட்டோர் காசநோயால் புதிதாகப் பாதிக்கப்படுவர் என்று உலக நலவாழ்வு நிறுவனம் கணித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.