தமிழ் நாட்டில் கிறிஸ்தவர்கள் துவக்கியுள்ள ஓர் அரசியல் கட்சி
மார்ச் 23,2011. வருகிற ஏப்ரல் மாதம் 13ம் தேதி தமிழ் நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தல்களையொட்டி,
அம்மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் ஓர் அரசியல் கட்சியைத் துவக்கியுள்ளனர். தமிழ் நாட்டைச்
சேர்ந்த 150 பேரை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தியக் கிறிஸ்தவ மக்கள் கழகம் என்ற இந்த அமைப்பை
மார்ச் 20 கடந்த ஞாயிறன்று சென்னை மயிலைப் பேராயர் சின்னப்பா அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து
வைத்தார். இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் பிற கிறிஸ்தவ சபைகளின் ஓர் அரசியல்
அங்கமாக இந்தக் கழகம் செயல்படும் என்று பேராயர் சின்னப்பா கூறினார். இந்தக் கழகத்தை
நிறுவிய F.A.நாதன் என்பவர் இக்கழகம் தற்போது தமிழ் நாட்டில் உள்ள கத்தோலிக்கர்களை மையப்படுத்தியதாக
இருக்கும் என்றும், பின்னர் இது பிற மாநிலங்களில் உள்ளவர்களையும், அனைத்து கிறிஸ்தவர்களையும்
ஒருங்கிணைக்கும் என்றும் கூறினார்.மீன்பிடிப்பவர்களின் பாதுகாப்பு, அனைவருக்கும் சமமான
வேலைவாய்ப்பு, நாட்டில் நிலவும் பண வீக்கத்தின் குறைப்பு ஆகியவைகளே தங்கள் கழகம் தற்போது
நாட்டின் அரசுகளுக்கு முன்வைக்கும் கோரிக்கைகள் என்று நாதன் மேலும் கூறினார்.