2011-03-23 16:02:04

இயேசு சபை அருள்தந்தை லூயி லெவே அவர்கள் இறந்ததன் 38வது ஆண்டு நிறைவு


மார்ச் 23,2011. இயேசு சபையைச் சேர்ந்த அருள்தந்தை லூயி லெவே அவர்கள் இறந்ததன் 38வது ஆண்டு நிறைவு அண்மையில் சிவகங்கை மறைமாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. குருக்கள், துறவறத்தார் மற்றும் விசுவாசிகள் என்று ஏறத்தாழ பத்தாயிரம் பேர் கூடி வந்து திருப்பலியில் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் அருள்தந்தை லெவே நினைவைக் கொண்டாட வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதென சருகணியின் பங்குத் தந்தை அருள்பணி சார்லஸ் கூறினார்.
1884ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்த அருள்தந்தை லூயி லெவே, 1904ம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்து 1908ம் ஆண்டு இந்தியாவில் பணி செய்வதற்கு சென்றார். ஓரியூர் திருத்தலத்தில் போற்றப்படும் புனித அருளானந்தர் 1947ம் ஆண்டு புனிதராக உயர்த்தப்படுவதற்கு அருள்தந்தை லெவே முயற்சிகள் பல மேற்கொண்டார்.
தமிழ் நாட்டில் சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த பல பங்குத் தளங்களில் 65 ஆண்டுகள் உழைத்த அருள்தந்தை லெவே, 1973ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி இறையடி சேர்ந்தார்.அருள்தந்தை லெவே இறந்து 38 ஆண்டுகள் ஆனாலும், அவரது கல்லறையை நாடி வரும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் கூடிவருகிறதென்றும், அருள்தந்தை புனிதராக உயர்த்தப்படுவார் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளதென்றும் அருள்தந்தை சார்லஸ் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.