பள்ளிகளில் திருச்சிலுவைகள் வைக்கப்படுவதற்கான நீதிமன்றத் தீர்ப்பிற்கு வத்திக்கான் வரவேற்பு
மார்ச்19,2011. இத்தாலியின் அரசுப் பள்ளிகளில் திருச்சிலுவைகள் வைக்கப்படலாம் என்று ஐரோப்பிய
மனித உரிமைகள் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்றுள்ளது வத்திக்கான். இந்தத்
தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெதரிக்கோ
லொம்பார்தி, இது வரலாற்று சிறப்பு மிக்கது, இது குறித்து திருப்பீடம் திருப்தியடைந்துள்ளது
என்றார். பள்ளிகளில் திருச்சிலுவைகள் இருப்பது மனித உரிமைகளுக்கு ஊறு விளைவிக்கும்
என்று இந்த ஐரோப்பிய நீதிமன்றம் 2009ம் ஆண்டு நவம்பரில் தீர்ப்பு வழங்கிய போது அதற்குப்
பரவலாக எதிர்ப்புக் கிளம்பியது. அத்துடன், இத்தாலி உட்பட இருபதுக்கு மேற்பட்ட நாடுகளும்,
பல அரசு சாரா நிறுவனங்களும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தன என்பதையும்
குறிப்பிட்டார் அருட்தந்தை லொம்பார்தி. இவ்வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு,
மனிதனின் உரிமைகளின் கலாச்சாரம் ஐரோப்பியக் கலாச்சாரத்தின் சமய அடித்தளங்களுக்கு எதிராக
இருக்கக் கூடாது என்பதை அங்கீகரித்துள்ளது என்றார் திருப்பீடப் பேச்சாளர். கிறிஸ்தவம்,
ஐரோப்பியக் கலாச்சாரத்திற்கு முக்கிய பங்களிப்பைக் கொடுத்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்
காட்டினார்.