2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் 20 விழுக்காடு குறைந்துவிடுவர்
மார்ச் 17,2011. பெண் குழந்தைகளைக் கருவில் அழிக்கும் வன்முறைப் போக்கு இந்தியாவில் தொடர்ந்து
வந்தால், 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் 20 விழுக்காடு குறைந்துவிடுவர்
என்று மருத்துவ அறிக்கை ஒன்று கூறுகிறது. அகில உலக மருத்துவ அறிஞர்களைக் கொண்டு நடத்தப்படும்
கனடா நாட்டு மருத்துவக் கழக இதழ் ஒன்றில் அண்மையில் வெளியான ஓர் அறிக்கையின்படி, இந்தியாவில்
ஏற்கனவே சில பகுதிகளில், பிறக்கும் ஒவ்வொரு 1000 ஆண் குழந்தைகளுக்கு 800 பெண் குழந்தைகளே
பிறக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய அரசின் கணிப்பின்படி கடந்த இருபது ஆண்டுகளில்
ஒரு கோடி பெண் குழந்தைகள் பிறப்பது தடுக்கப்பட்டுள்ளதென்று கூறப்படுகிறது. பிறக்கப்போகும்
குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிந்து கருகலைத்தல் மேற்கொள்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதென்றாலும்,
இந்த முயற்சி பல இடங்களில் இன்னும் தொடர்ந்து வருகிறதென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. கனடா
நாட்டு மருத்துவக் கழக ஆய்வு சீனா, கொரியா மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டது. ஒருவர்
இறந்தபின் அவரது ஆண் குழந்தை அவரது சிதைக்குத் தீமூட்டினால் மட்டுமே அவரது ஆன்மா மோட்சம்
அடையும் என்ற நம்பிக்கையே ஆண் குழந்தை பிறப்பதை அதிகம் எதிர்பார்க்கும் போக்கை இந்தியாவில்
உருவாகியுள்ளதென்று இவ்வாய்வினை மேற்கொண்ட Therese Hesketh என்பவர் கூறினார்.