முனைவர் இரா.திருமுருகன் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.
இயல், இசைத் தமிழில் வல்லவர். குழல் இசைப்பதிலும், பாடுவதிலும் தேர்ந்தவர். புதுவை அரசுப்
பள்ளியில் பல காலம் ஆசிரியராக இருந்து தமிழ்ப்பணி ஆற்றியவர். திருமுருகன் புதுவை மாநிலத்தில்
கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் 1929ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர்
சுப்பிரமணியன். தனித்தமிழ் ஆர்வம் காரணமாக தன் பெயரைத் திருமுருகன் என மாற்றிக்கொண்டார். இவர்
பண்டிதம், கர்நாடக இசை - குழல் மேனிலை, பிரெஞ்சு மொழிப்பட்டயம், கலைமுதுவர், கல்வியியல்
முதுவர், மொழியியல் சான்றிதழ், முனைவர் உள்ளிட்ட பல பட்டங்களைப் பெற்றவர். 44 ஆண்டுகள்
அரசுப்பணியாற்றியபின் புதுவையில் தமிழ் வளர்ச்சிக்கு வேண்டிய ஆக்கப்பணிகளில் ஈடுபட்டார். புதுவைத்
தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளையின் நிறுவுனராகவும், "தெளிதமிழ்" என்னும் மாத இதழின்
சிறப்பு ஆசிரியராகவும், "தமிழ்க்காவல்" என்னும் இணைய இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.‘இலக்கணக்
கடல்’ எனப் புகழ்பெற்ற புதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா. திருமுருகன் 2009ம் ஆண்டு, சூன்
3ம் தேதி புதுவையில் உள்ள தம் இல்லத்தில் காலமானார்.