2011-03-14 15:33:22

திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை ஜெப உரை.


மார்ச் 14, 2011. தவக்காலத்தின்போது திருச்சபை, பாவம் மற்றும் தீமையின் சக்திகளுக்கு எதிராக இயேசு கிறிஸ்துவின் பக்கமே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என, பாவத்தின் இருப்பு குறித்து இஞ்ஞாயிறு மூவேளை ஜெப உரையின்போது உரை வழங்கிய திருத்தந்தை குறிப்பிட்டார்.
உலகில் பாவம் என்பதை மனிதனின் சமயக் கண்ணோட்டத்தோடு தொடர்புடையதாக மக்கள் கணிக்கிறார்கள் என்ற திருத்தந்தை, சூரியன் மறையும்போது நிழலும் மறைகிறது மற்றும் சூரியன் தோன்றும்போதே நிழலும் எழுகிறது என்பது போல் கடவுள் என்ற எண்ணமே பாவம் என்ற எண்ணத்தையும் கொண்டு வருகிறது என்று குறிப்பிட்டார். குற்ற உணர்வு என்பதிலிருந்து வேறுபட்டதாக உளவியலில் புரிந்துகொள்ளப்படும் பாவம் என்பதன் அர்த்தம், கடவுளைக் குறித்த உண்மை அர்த்தத்தை நாம் முழுவதுமாக கண்டு கொள்வதன் மூலமே புரிந்துகொள்ள முடியும் என்றார்.
கடவுள் பாவத்தையும் தீமையையும் பொறுத்துக் கொள்வதில்லை, ஏனெனில் அவர் அன்பு, நீதி மற்றும் பிரமாணிக்கம் உடையவர் என்ற பாப்பிறை, யூதகுல வரலாற்றில் எகிப்தின் அடிமைத் தளையிலிருந்து நம்மை மீட்ட இறைவன், தன் மக்களைப் பாவத்திலிருந்து விடுவிக்க தன் மகனையே அனுப்பினார் என்றார். பாவங்கள் அனைத்தின் காரணமும் ஆதாரமும் ஆகிய சாத்தான், இறைத்திட்டத்திற்கு எதிராக தன் அனைத்துச் சக்திகளையும் பயன்படுத்துகிறது என்ற திருத்தந்தை, தவக்காலத்தின்போது விசுவாசிகள் தீய சக்திகளுக்கு எதிரான தங்கள் ஆன்மீகப் போராட்டத்தின் மூலம் தனி ஆளாகவும் திருச்சபையோடு இணைந்தும் பாவத்திற்கு எதிராக இயேசுவோடு நிற்கிறார்கள் என்றார்.








All the contents on this site are copyrighted ©.