2011-03-14 15:35:18

ஜப்பானியர்கள் தைரியமுடன் இருப்பதற்கு ஆயர்கள் வேண்டுகோள்


மார்ச்14,2011. நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு ஜப்பானியர்களுக்கு அந்நாட்டு ஆயர்கள் தங்களது செபத்தையும் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்த அதேவேளை தூய ஆவியின் உதவியுடன் அம்மக்கள் தைரியமுடன் இருக்குமாறு கேட்டுள்ளனர்.
நமது வாழ்க்கை கடவுளின் கரங்களில் இருக்கின்றது மற்றும் வாழ்வு கடவுளிடமிருந்து வரும் கொடை என்பதை பத்தாயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களைக் காவு கொண்டுள்ள இத்துயர நிகழ்வு நமக்கு நினைவூட்டுகின்றது என்று ஜப்பானின் Saitama ஆயர் Marcellinus Daiji Tani கூறினார்.
மேலும், காரித்தாஸ் ஜப்பானும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நிதி சேமிப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இன்னும் ஜப்பானிய ஆயர்கள் சென்டைய் நகரில் இப்புதனன்று அவசரகால கூட்டம் ஒன்றைக் கூட்டி இடர்துடைப்புப் பணிகள் பற்றிப் பேசவிருக்கின்றனர்.
ஜப்பானின் சுமார் 12 கோடியே 77 இலட்சம் மக்களில் 0.4 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். 84 விழுக்காட்டினர் ஷின்டோ மற்றும் புத்தமதத்தினர்.
இன்னும், ஜப்பானில் அணுமின் உலைகள் வெடித்துள்ளதையொட்டி அறிக்கை வெளியிட்ட பிரிட்டன் பாக்ஸ் கிறிஸ்டி அமைப்பின் உதவித்தலைவர் புரூஸ் கென்ட், நாடுகள் அணுசக்தியைப் பயன்படுத்துவது குறித்துப் பரிசீலனை செய்யுமாறு கேட்டுள்ளார்.
அணுசக்தி நிலையங்களை அதிகரித்து வருவது இப்போதைய ஜப்பான் நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகளுக்குக் காரணமாக அமைகின்றன என்றும் அவர் கூறினார்








All the contents on this site are copyrighted ©.