இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபை பெண்கள் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தியுள்ளது
- கர்தினால் Telesphore Toppo
மார்ச் 09,2011. கல்வி மற்றும் நலம் குறித்த சேவைகளின் மூலம் கடந்த பல நூற்றாண்டுகளாக
இந்தியாவில் பணிகள் புரிந்து வரும் இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபை பெண்கள் முன்னேற்றம்
என்பதில் தனி கவனம் செலுத்தியுள்ளது என்று கர்தினால் Telesphore Toppo கூறினார். இச்செவ்வாயன்று
கொண்டாடப்பட்ட அகில உலக மகளிர் நாளின் நூற்றாண்டையொட்டி, ஆசிய செய்தி நிறுவனத்திற்கு
அளித்த பேட்டியொன்றில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவரான கர்தினால் Toppo
இவ்வாறு கூறினார். இந்தியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவே இருந்தாலும்,
திருச்சபை உருவாக்கியுள்ள கல்வி மற்றும் நல நிறுவனங்கள் வழியே மக்களுக்கு, குறிப்பாக
பெண்களுக்குச் செய்து வரும் சேவையை அனைவரும் அறிவர் என்று கர்தினால் எடுத்துரைத்தார்.பெண்களுக்கும்,
குழந்தைகளுக்கும் இழைக்கப்படும் அநீதிகளை திருச்சபை உணர்ந்துள்ளது என்று கூறிய கர்தினால்,
திருச்சபையில் ஆங்காங்கே காணப்படும் இந்த அநீதிகளையும், இந்தியாவில் பரவலாக உள்ள அநீதிகளையும்
முற்றிலும் களைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இந்திய கத்தோலிக்க ஆயர்
பேரவையின் தலைவர் கூறினார்.