மார்ச்05,2011. ஆப்ரிக்க நாடான ஐவரிகோஸ்டில் அதிகரித்து வருகின்ற வன்முறைகள் காரணமாக
மிகுந்த களைப்பும் கவலையும் அடைந்துள்ளதாக ஐநாவின் அமைதிகாக்கும் படை கூறுகின்றது. பதவியிலுள்ள
அதிபர் லோரண்ட் பாக்போவுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் ஆறு பேர் அந்நாட்டுப்
படையினரால் இவ்வியாழக்கிழமைக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில்
அதிபர் பாக்போ, எதிரணி வேட்பாளர் அலஸ்ஸான் ஒட்டாராவிடம் தோற்றுவிட்டதாக சர்வதேச சமூகம்
பெரும்பாலும் கருதுகின்ற போதிலும்கூட அவர் பதவியை விட்டு இறங்க மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் தொடங்கிய நாள் முதல் நூற்றுக்கணக்கான எதிரணி ஆதரவாளர்கள் பாதுகாப்பு படையினராலோ
அதிபர் லோரண்ட் பாக்போவால் கட்டுப்படுத்தப்படும் ஆயுதக்குழுக்களாலோ திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
அலஸ்ஸான் ஒட்டாராவே தேர்தலில் வெற்றிபெற்றதாக எதிரணியினர் கூறிவருவதை நிறுத்துவதற்கான
உத்தியாக, படைகள் இவ்வாறான கொலைகளை மேற்கொள்வதாக கூறப்படுகின்றது.