மார்ச் 10, ஆசியப் பகுதியின் திருப்பீடத்துக்கானத் தூதர்களுடன் கூட்டம்
மார்ச் 04,2011. இம்மாதம் 10ம் தேதியான வருகிற வியாழனன்று ஆசியப் பகுதியின் திருப்பீடத்துக்கானத்
தூதர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாகத் திருப்பீடக் கலாச்சார அவை அறிவித்துள்ளது. 2009ம்
ஆண்டு கிறிஸ்மஸையொட்டி நடைபெற்ற இத்தகைய கூட்டம் வெற்றியடைந்ததை முன்னிட்டு மீண்டும்
ஆசிய நாடுகளின் தூதர்களுடன் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது இத்திருப்பீட அவை. இதில்
கலந்து கொள்வதற்கு 22 நாடுகளின் தூதர்கள் உறுதியளித்திருப்பதாகத் தெரிவித்த இத்திருப்பீட
அவை, திருப்பீடச் செயலகம், இன்னும பிற வத்திக்கான் துறைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள்
என்றும் கூறியது. இக்கூட்டத்தில், ஆசியாவில் கலாச்சாரங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு,
பொருளாதார வளர்ச்சி போன்ற தலைப்புகளில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம் பெறும் எனத் திருப்பீடக்
கலாச்சார அவையின் ஆசியப் பரிவின் தலைவர் அருட்திரு Theodore Mascarenhas கூறினார்
ஆப்ரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான இத்தகைய கூட்டத்தை வருங்காலத்தில்
நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.