2011-02-28 15:20:43

அரபு நாடுகளின் கிளர்ச்சிகளில் வருங்காலம் குறித்த நம்பிக்கைகளும் தெரிவதாக கூறுகிறார் திருப்பீடப்பேச்சாளர்.


பிப் 28, 2011. பல அரபு நாடுகளில் குடியரசிற்கென அண்மையில் இடம்பெற்று வரும் வன்முறை நடவடிக்கைகள் கவலை தருவதாக இருக்கின்ற போதிலும், இதன் வழியான மாற்றங்கள் நம்பிக்கைத் தருவதாக உள்ளன என்றார் திருப்பீடப்பேச்சாளர்.
வாரம் ஒருமுறை தொலைக்காட்சியில் வழங்கும் 'ஒக்தாவா தியேஸ்' என்ற நிகழ்ச்சியில் அரபு நாடுகளின் அண்மை கிளர்ச்சி குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி, மேற்கத்திய நாடுகள் இத்தகைய அரசியல் மாற்றங்களில் தலையிடக்கூடாது, ஆனால் குடியரசிற்கான தங்கள் உதவிகளை வழங்கவேண்டும் என்றார்.
குடியரசிற்கான அரபு நாடுகளின் மக்களின் முயற்சிகள் அவர்களுக்குள்ளிருந்தே வரவேண்டுமேயொழிய, பிறநாடுகளின் தலையீட்டால் அல்ல என்பதையும் வலியுறுத்தினார் திருப்பீடப் பேச்சாளர்.
வன்முறை நடவடிக்கைகள், அமைதிக்கான முயற்சிகளுக்கு பெரும் தடையாக உள்ளன என்ற இயேசுசபை குரு லொம்பார்தி, அரபு நாடுகளின் தற்போதைய கிளர்ச்சிகள் அப்பகுதிக்கான குடியரசு வசந்த காலமாக அரசியல் வல்லுனர்களால் நோக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பிய சமூகத்தின் குடியரசு, மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் குறித்து அரபு நாடுகளின் இளைய சமுதாயம் அறிந்துள்ளதும், பேச்சுவார்த்தைகள் மற்றும் உலக சமுதாயத்தில் தங்களை இணைத்துக்கொள்வதற்கான அவர்களின் ஆர்வமும் நல்லதொரு நம்பிக்கையின் அடையாளங்களாக உள்ளன என்பதையும் எடுத்துரைத்தார் திருப்பீடப்பேச்சாளர் குரு லொம்பார்தி.








All the contents on this site are copyrighted ©.