திருப்பீட வாழ்வுக் கழகத் தலைவர் : மனித வாழ்வைப் பாதுகாக்க வேண்டிய பணி மிகவும் சவாலானது
பிப்.24,2011. மனித வாழ்வுக்கு எதிரான அச்சுறுத்தல் மிகக் கடுமையாக அதிகரித்து வரும்
இன்றையக் காலக்கட்டத்தில், ஒருங்கிணைந்த மனித வாழ்வைப் பாதுகாக்க வேண்டிய நமது பணி மிகவும்
சவாலானது என்று திருப்பீட வாழ்வுக் கழகத் தலைவர் ஆயர் கராஸ்கோ தெ பவுலா கூறினார். திருப்பீட
வாழ்வுக் கழகம் இவ்வியாழனன்று வத்திக்கானில் தொடங்கிய மூன்று நாள் பொதுக் கூட்டத்தில்
உரையாற்றிய ஆயர் தெ பவுலா, இக்காலத்தில் மனித வாழ்வைப் பாதுகாக்க வேண்டிய நமது பணியை
மிக ஆழமாகத் தீவிரப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார். இன்றைய நிலவரத்தை
நோக்கும் போது, மனித வாழ்வுக்கானத் திருப்பீட கழகத்தை மனிதனுக்கானத் திருப்பீட கழகம்
என்று பெயரிடத் தோன்றுகிறது என்றும் உரைத்த ஆயர் தெ பவுலா, வருங்காலத்தைப் புதிய கண்களுடன்
நோக்க வேண்டும் என்றார்.