திருச்சபையின் உயரிய மனிதாபிமான சேவைகளும் மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் - கர்தினால்
சாரா
பிப்.23,2011. திருச்சபையில் ஒரு சிலர் செய்யும் குறைகளைப் பெரிதுபடுத்தும் ஊடகத்துறை,
திருச்சபை மேற்கொள்ளும் பல உயரிய மனிதாபிமானச் சேவைகளையும் மக்களுக்கு எடுத்துச் செல்ல
வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கர்தினால் இராபர்ட் சாரா. திருச்சபையின் பிறரன்புப்
பணிகளை ஒருங்கிணைக்கும் திருப்பீடத்தின் Cor Unum அவைத் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா
இச்செவ்வாயன்று திருத்தந்தையின் தவக்காலச் செய்தியை வெளியிட்டுப் பேசியபோது, செய்தியாளர்களிடம்
இப்பரிந்துரையை முன்வைத்தார். கடந்த ஆண்டு சனவரியில் பெரும் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட
ஹெயிட்டி நாட்டிற்கு திருச்சபை செய்துள்ள எண்ணிலடங்காச் சேவைகளை நினைவுறுத்திய கர்தினால்,
இவ்வாண்டு சனவரியில் திருத்தந்தையின் பிரதிநிதியாக ஹெயிட்டிக்குத் தான் சென்றதைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், உலகிலேயே மிகவும் ஏழ்மையான ஒரு பகுதியாக இருக்கும் ஆப்ரிக்காவின் சாஹெல்
பகுதியில், இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சில
பிறரன்பு அமைப்புக்களைக் குறித்தும் கர்தினால் சாரா எடுத்துரைத்தார். திருச்சபை ஒவ்வொரு
நாளும் மேற்கொள்ளும் பல ஆயிரம் பிரறன்புப் பணிகளில் இவ்விரண்டை மட்டும் எடுத்துக்காட்டிப்
பேசினார் கர்தினால் இராபர்ட் சாரா. உலகில் காணப்படும் துன்பங்கள் குறித்தும் அவைகளைப்
போக்க தவக்காலம் ஒரு சிறந்த நேரம் என்றும் திருத்தந்தையின் தவக்காலச் செய்தி அமைந்திருப்பதை
Cor Unum அவைத்தலைவர் கர்தினால் Robert Sarah கூறினார்.