2011-02-19 15:59:56

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
'காந்தி' திரைப்படத்தை நம்மில் பலர் பார்த்திருக்கிறோம். அத்திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இது: காந்தியும் அவரது நண்பரான கிறிஸ்தவ போதகர் சார்லி ஆண்ட்ரூஸும் ஒரு நாள் வீதியில் நடந்து செல்லும்போது, ஒரு ரௌடி கும்பல் திடீரென அவர்களை வழி மறைத்து நிற்கும். அவர்களைக் கண்டதும், சார்லி அவ்விடத்தை விட்டுச் சென்று விடலாம் என்று காந்தியிடம் சொல்வார். காந்தி அவரிடம், "உன் எதிரி உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தைக் காட்டவேண்டுமென்று இயேசு சொல்லவில்லையா?" என்று கேட்பார். அதற்கு சார்லி, "சொன்னார்... ஆனால், அதை ஓர் உருவகமாய்ச் சொன்னார்." என்று பூசி மழுப்புவார். காந்தி அவரிடம், "அப்படித் தெரியவில்லை எனக்கு. எதிராளிகள் முன்னிலையில் நாம் துணிவுடன் நிற்கவேண்டும். அவர்கள் எத்தனை முறை அடித்தாலும் திருப்பி அடிக்கவோ, திரும்பி ஓடவோ மறுத்து துணிவுடன் நிற்க வேண்டும்." என்று சொல்வார்.

காந்தியின் இந்தக் கூற்று ஒன்று 'ஹீரோத்தனமாக'த் தெரியலாம், அல்லது பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம். நம் திரைப்படங்களில் வரும் ஹீரோக்களும் அடிகளைத் தாங்கிக் கொள்வார்கள்... ஆனால், சிறிது நேரம் கழித்து தான் பெற்ற அடிக்கு பல மடங்கு திருப்பித் தருவார்கள். மறு கன்னத்தைக் காட்டுங்கள் என்று சொன்ன இயேசுவின் கூற்று துணிச்சலா? மதியீனமா? புனிதமா? இக்கேள்வி இயேசுவின் காலத்திலிருந்து நம்மைத் தொடர்கிறது.

இன்றைய நற்செய்தி இக்கேள்வியை, இந்த விவாதத்தை மீண்டும் கிளறி விடுகிறது. இயேசுவின் கூற்றுகளை, வெறும் மேற்கோள்களாகக் காட்டுவது எளிது. ஆனால், அவைகளை இயேசு கூறிய சந்தர்ப்பச் சூழ்நிலைகளுடன் பார்க்கும்போதே அவரது வார்த்தைகளின் பொருளை ஓரளவாகிலும் புரிந்து கொள்ள முடியும்.
மறு கன்னத்தைக் காட்டுங்கள் என்ற இயேசுவின் வார்த்தைகளை நினைத்ததும், இயேசுவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வும் நினைவுக்கு வரும். (யோவான் 18 : 22-23) தலைமைக் குருவின் காவலர் இயேசுவைக் கன்னத்தில் அறைந்தபோது, மறுகன்னத்தைக் காட்டுவதற்குப் பதில், "ஏன் என்னை அடிக்கிறீர்?" என்று இயேசு கேள்வி கேட்டார் என்ற நிகழ்வு நம் நினைவுக்கு வரும். அவர் போதித்தது ஒன்று, அவர் செய்தது ஒன்று என்று அவசர முடிவுகளும் மனதில் எழும். எனவேதான் இயேசுவின் கூற்றுகளை சூழ்நிலையுடன் பார்ப்பது நல்லது என்று சொன்னேன்.
தலைமைக் குருவுக்கு முன் விசாரணை நடந்தபோது, உண்மைகள் புதைக்கப்படக் கூடாது என்ற வேட்கையில் இயேசு பேசிக் கொண்டிருந்தார். அவர் கூறிய சங்கடமான உண்மைகளை மௌனமாக்க காவலர் அறைந்தார். அந்தச் சூழ்நிலையில் உண்மை வெளிவர வேண்டும் என்பது முக்கியம் என்று இயேசு உணர்ந்ததால், தன்னை மௌனமாக்க நினைத்த காவலரை எதிர்த்து கேள்வி கேட்டார்.

தன்னை அறைந்த காவலரை எதிர்த்து கேள்வி எழுப்பிய இயேசு, இன்றைய நற்செய்தியில் "மறு கன்னத்தைக் காட்டுங்கள்" என்று எந்தப் பின்னணியில் சொல்லியிருக்கிறார் என்பதை உணர முயல வேண்டும். மறு கன்னத்தைக் காட்டுவது மட்டுமல்ல. உள்ளாடையைப் பறித்துச் செல்பவருக்கு மேலாடையையும் அவர் கேட்காமலேயே கொடுக்கச் சொல்கிறார். ஒரு மைல் தூரம் நம்மை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்பவருடன் இரண்டு மைல் நடக்கச் சொல்கிறார். இவைகள் அனைத்திற்கும் இயேசு சொல்லும் ஒரு காரணம் இன்றைய நற்செய்தியில் தரப்பட்டுள்ளது. இப்பகுதியை மலைப்பொழிவின் மையம் என்று விவிலிய ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

மத்தேயு 5 : 43-45
“‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக, பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாகஎனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

மறு கன்னத்தைக் காட்டுவது பற்றி சிறிது ஆழமாகச் சிந்திப்பது நல்லது. "மறு கன்னத்தைக் காட்டு." அல்லது "மறு கன்னம்" The Other Cheek என்ற வார்த்தைகளில் பல நல்ல விளக்கங்கள், குதர்க்கமான விளக்கங்கள், விவாதங்கள் இன்றும் தொடர்கின்றன.

கண்ணுக்குக் கண்... பல்லுக்குப் பல் என்பது பழையச் சட்டம். "கண்ணுக்குக் கண்" என்று உலகத்தில் எல்லாரும் பழிவாங்கும் படலத்தில் இறங்கினால், உலகமே விரைவில் குருடாகிப் போகும் என்று காந்தி சொல்லிச் சென்றார். சரி... பழிக்குப் பழி வேண்டாம். அதற்கு அடுத்த நிலையை நாம் சிந்திக்கலாம் அல்லவா? காந்தியின் நண்பர் சார்லியைப் போல், அல்லது நமது தமிழ் பழமொழி சொல்லித் தருவது போல், "துஷ்டனைக் கண்டால், தூர விலகலாம்" அல்லவா?

துஷ்டனைக் கண்டு நாம் ஒதுங்கிப் போகும்போது, நமக்கு வந்த பிரச்சனை தீர்ந்து விடலாம். ஆனால், அந்தப் பிரச்சனையின் பிறப்பிடம், அந்த துஷ்டன் மாறும் வாய்ப்பை நாம் தரவில்லையே. அதைத் தான் இயேசு தரச் சொல்கிறார். நமது மறு கன்னத்தைக் காட்டும்போது, நமது மேலாடையையும் சேர்த்துத் தரும்போது, நமது பகைவர் மாறும் வாய்ப்பை நாம் உருவாக்குகிறோம் என்று இயேசு கூறுகிறார்.

மறு கன்னத்தைக் காட்டுவது, மேலாடையைத் தருவது, கூடுதல் ஒரு மைல் நடப்பது ஆகிய நற்செயல்கள் நாம் புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் சிறந்த வழிகள் என்று நாம் சிந்தித்தால், அதுவும் இயேசுவின் கண்ணோட்டம் அல்ல.
குத்துச் சண்டை பயிற்சிகளைப் பார்த்திருக்கிறோம். அந்தப் பயிற்சிகளில் சில சமயம் குத்துச் சண்டை வீரர்களின் உடலின் சில பகுதிகளை உறுதியாக்க, வேறொருவரிடம் அப்பகுதிகளில் குத்துக்களைப் பெறுவர் வீரர்கள். இப்படி குத்துவதை நாம் தாக்குதல் என்று கூடச் சொல்வதில்லை, அவைகள் பயிற்சிகள். அதேபோல், ஒருவர் நம்மை அறையும்போது, நாம் ஆன்மாவில் பலம் பெறுவதற்காக மீண்டும் அவர் அறைய வேண்டுமென்று அடுத்த கன்னத்தைக் காட்டுவது நம் சொந்த பலனுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சி. இப்படி செய்வதால், ஆன்மா பலம் பெறக்கூடும்... மறு கன்னத்தைக் காட்டும் நாம் சுற்றி நின்று பார்ப்பவர்கள் மனதில் ஹீரோக்கள் ஆகக்கூடும். ஆனால், நமக்கு இந்த நன்மைகள் சேரும் நேரத்தில் நம்மைத் தாக்கும் பகைவரிடம் மாறுதல்கள் எதுவும் இல்லையெனில், நாம் மறுகன்னத்தைக் காட்டுவதில் அர்த்தமில்லை. நாம் மறுகன்னத்தைக் காட்டுவதால், மேலாடையையும் சேர்த்துக் கொடுப்பதால் நமது பகைவரிடம் மாறுதல்கள் வர வேண்டும். அம்மாறுதல்கள் வரும் வரை நாம் இந்த நற்செயல்களைத் தொடர வேண்டும். இதுதான் இயேசு நமக்கு முன் இன்று வைக்கும் சவால்.

மறுகன்னத்தைக் காட்டியதால் பகைவரிடம் உண்டான மன மாற்றங்கள், அவர்கள் பெற்ற மறு வாழ்வு இவைகளைக் கூறும் பல நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் உலகில் நடந்து வருகின்றன.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் ஒரு பகுதியில் இரவு 8 மணிக்கு ஒரு பூங்காவில் ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்கள் தினமும் வழங்கப்படும். பொருளாதாரச் சரிவால் பலர் இந்தக் கூட்டத்தில் சேர்ந்தனர். Nick என்ற இளைஞனும் இக்கூட்டத்தில் ஒருவன். அவன் கராத்தேயில் ஓரளவு திறமை பெற்றவன். அவன் அன்று தன் உணவை முடித்த வேளையில், அவனை விட பலம் மிகுந்த ஒருவன் திடீரென Nickஇடம் வந்து அவனது முகத்தில் குத்தினான். நிலை தடுமாறி விழுந்தான் Nick. சுதாரித்து அவன் எழுந்து, தன்னைக் குத்தியவனிடம், "மீண்டும் குத்துவதற்கு விருப்பமா?" என்று கேட்டான். அந்த பலசாலி மீண்டும் குத்தினான். "மறுபடியும் குத்த விரும்புகிறாயா?" என்று Nick அவனிடம் கேட்டான். இப்படி நான்கு அல்லது ஐந்து முறை குத்தியபின், அந்த பலசாலி கீழே அமர்ந்து தேம்பித் தேம்பி அழுதான். Nick அவனருகே அமர்ந்தான். பலசாலி Nick இடம், "நான் உன்னைக் குத்தினேன் என்று காவல் துறைக்குச் சொல்... அவர்கள் வந்து என்னைக் கைது செய்யட்டும்." என்று அழுதபடியே சொன்னான்.
அந்த பலசாலி பல ஆண்டுகள் சிறையில் இருந்தவன். விடுதலை பெற்று வந்ததிலிருந்து உலகம் அவனை ஏற்றுக் கொள்ளாததால், அவனால் வெளி உலகில் வாழ முடியவில்லை. மீண்டும் சிறைக்குத் திரும்புவதே மேல் என்று அவன் எண்ணினான். Nick அவனிடம், "சரி, வா. நாம் போய் ஒரு காபி அருந்தியபடியே பேசுவோம்." என்று அவனை அழைத்துச் சென்றான். பலசாலியின் வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. தன்னைச் சிறைக்குள் அடைத்துக் கொள்வதே மேல் என்று எண்ணிய அந்த மனிதனைச் சூழ்ந்திருந்த சிறைகளிலிருந்து வெளியே கொண்டு வந்தது Nick அவனிடம் தன் மறு கன்னத்தைக் காட்டிய அந்த நிகழ்ச்சி.

மறு கன்னத்தைக் காட்டும் பல வீரர்கள் இன்றும் வாழ்கின்றனர். இவர்களின் வீரச் செயல்களில் நூற்றில் ஒன்று அல்லது ஆயிரத்தில் ஒன்று என்றாவது, நமது செய்தித் தாள்களில், தொலைக் காட்சிகளில் இடம் பெறலாம். மற்றபடி நமது பெரும்பாலான செய்திகள் "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" செய்திகளே. பழிக்குப் பழி என்று நமது மனித வரலாற்றை இரத்தத்தில் எழுதும் நம்மைப் பற்றி சொல்லப்படும் ஒரு சீனப் பழமொழி இது: "பழிக்குப் பழி வாங்க நினைப்பவன் இரு சவக் குழிகளைத் தோண்ட வேண்டும். ஒன்று மற்றவருக்கு, மற்றொன்று தனக்கு."
வெறுப்பின் உச்சங்களை மனித வரலாறு எட்டிய ஒரு சில நேரங்கள் என்று நினைத்துப் பார்த்தால், ஆப்ரிக்காவின் Rwanda நாடு மனதில் வரும். Hutu, Tutsi ஆகிய இனங்களுக்கிடையே ஆழமாய் புரையோடிப் போன பழி உணர்வுகளைப் பற்றி அங்குள்ள ஒரு போதகர் கூறும் அழகிய கருத்து இது: "பழிக்குப் பழி என்ற வெறுப்பைச் சுமந்து திரியும் மனம் அமிலத்தைச் சுமந்துள்ள ஒரு உலோகக் கிண்ணத்தைப் போன்றது. கிண்ணத்தில் அமிலம் இருக்கும் வரை அந்த அமிலம் கிண்ணத்தைக் கொஞ்சம், கொஞ்சமாக அரித்துக் கொண்டே இருக்கும், கிண்ணத்தை முற்றிலும் அழித்து விடும் ஆபத்து உண்டு."பழிக்குப் பழி என்ற அமிலத்தை வெளியில் எறிந்துவிட்டு, அன்பு எனும் அமுதத்தை மனதில் நிரப்புவோம். பழிக்குப் பழி என்ற உலக மந்திரத்திற்கு எதிராக இந்தியாவில் நடந்த ஒரு சம்பவம் அனைவர் மனதிலும் அழியாமல் பதிந்திருக்கும் என்பது என் நம்பிக்கை. 1999ம் ஆண்டு சனவரி மாதம் ஒரிஸ்ஸாவில் தன் கணவர் கிரகாம் ஸ்டெயின்ஸையும், Philip, Timothy என்ற தன் இரு மகன்களையும் உயிரோடு எரித்துக் கொன்ற தாரா சிங்கின் மரண தண்டனையை இரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்ட Gladys Staines பற்றிய செய்திகளை நாம் அறிவோம். மன்னிப்பில் மட்டுமே நம்பிக்கை வளரும் என்று Gladys சொன்னதும் நமக்கு நினைவிருக்கலாம். மன்னிப்பதால், மறு கன்னத்தைக் காட்டுவதால் வளரும் நம்பிக்கையை நாமும் வளர்த்துக் கொள்ள முயல்வோம். நாம் மறு கன்னத்தைக் காட்டும்போது, அக்கன்னத்தில் அறையும் நம் பகைவர்களை மனம் மாற்றும் கனிவும், துணிவும் நமக்கு வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம்.







All the contents on this site are copyrighted ©.