கடவுளுக்கு முதலிடம் தருவதால்தான் மனித குலம் தன் இறுதி நிலையை கண்டுகொள்ள முடியும்
- திருத்தந்தை
பிப்.18,2011. ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் மனதிலும் கடவுளுக்கான முதலிடத்தை மீண்டும்
உருவாக்குவதன் மூலம் மட்டுமே, மனித குலம் தன் இறுதி நிலையை மீண்டும் கண்டுகொள்வதற்கான
பாதையை காணமுடியும் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை
இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகருக்கு வந்துள்ள பிலிப்பீன்ஸ் ஆயர்களை
இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இன்றைய மக்களின் மகிழ்ச்சியான
வாழ்வுக்குத் தடைகளாக இருக்கும் பொருளாதார வளர்ச்சியின் சவால்களை மட்டுமல்ல, மதச்சார்பற்ற
நிலை, உலகாயுதபோக்கு, நுகர்வுக்கலாச்சாரம் போன்றவைகள் முன்வைக்கும் சவால்களுக்கும் பதிலளித்து
மக்களுக்கு உதவ வேண்டிய கடமை திருச்சபைக்கு உள்ளது என்றார்.கடவுள் வாழ்கிறார், நம்மை
அன்பு கூர்கிறார், நம் ஆழமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் என்பதை மக்கள் உணர்ந்து
ஏற்கும் வகையில் திருச்சபையின் பணிகள் இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்திய பாப்பிறை,
பிலிப்பீன்ஸ் திருச்சபையில் பொதுநிலையினரின் ஈடுபாட்டை பாராட்டியதோடு, இளைஞர்களுக்கான
பணிகளில் அதிகக் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியத்தையும் ஆயர்களிடம் வலியுறுத்தினார்.