சத்தீஸ்கர் மாநில அரசும் மாவோயிஸ்ட் போராளிகளும் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபடும்
முயற்சிக்கு தலத்திருச்சபை ஆதரவு
பிப்.17,2011. இந்தியாவில் சத்தீஸ்கர் மாநில அரசும் மாவோயிஸ்ட் போராளிகளும் அமைதி பேச்சு
வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சுவாமி அக்னிவேஷ் மேற்கொண்டுள்ள முயற்சியை தலத்திருச்சபையும்
சமூக ஆரவலர்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர். மாவோயிஸ்ட் குழுவினரால் கடத்தப்பட்டு 18
நாட்கள் பிணையக் கைதிகளாய் இருந்த ஐந்து காவல் துறையினரை கடந்த வார இறுதியில் அக்குழுவினர்
விடுவித்ததைத் தொடர்ந்து, சுவாமி அக்னிவேஷ் ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் மாவோயிஸ்ட்
குழுவும், அரசும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டுமென்ற தன் கோரிக்கையை முன் வைத்தார். இக்கோரிக்கைக்குப்
பதில் அளித்த சத்தீஸ்கர் மாநில முதல் அமைச்சர் மக்களின் நலன் கருதி எந்த ஒரு முயற்சிக்கும்
தானும் தன் அரசும் தயார் என்று தெரிவித்துள்ளார்.மனித உரிமை ஆவர்வலரான சுவாமி அக்னிவேஷின்
இம்முயற்சி பெரிதும் வரவேற்கப்படவேண்டியதொன்று என்று Bastar பல்கலைகழகத்தில் பணி புரியும்
அருள்தந்தை Paul Thymoottil கூறினார். மாவோயிஸ்ட் போராட்டக் குழுக்கள் குறித்த ஆய்வில்
அருள்தந்தை தய்மூட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.