2011-02-14 15:56:36

அயர்லாந்தில் கோவில் திருமணங்களுக்குப் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது


பிப்.14,2011. அயர்லாந்து நாட்டில் கோவில் திருமணங்களுக்கென பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நாட்டு கத்தோலிக்கத் திருச்சபையின் திருமண பணி மையம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் 6 வாரங்களில் திருமண தயாரிப்பு வகுப்புகளில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 1183 ஆக இருக்க, இவ்வாண்டு அதே காலக்கட்டத்தில் இவ்வெண்ணிக்கை 1255 என தெரிவித்தது இம்மையம்.

பொருளாதார சிக்கல் மற்றும் வீழ்ச்சியின் மத்தியிலும் பல தம்பதியர்கள் திருமணமின்றி சேர்ந்து வாழும் நிலையைச் சீர்செய்யும் பொருட்டு தாங்களே முன்வந்து திருமண உறவில் இணைய தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருப்பது நல்லதோர் அடையாளம் என்றார் அக்கத்தோலிக்க மையத்தின் தேசிய இயக்குனர் ரூத் பரோர்.

இவ்வாண்டில் திருமணத் தயாரிப்பிற்கென தங்கள் பெயர்களைப் பதிவுச் செய்துள்ளோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தகும் வகையில் அதிகரித்துள்ளது எனவும் கூறினார் அவர்.

தம்பதியரின் துன்பகரமான அனைத்து வேளைகளிலும் உடனிருந்து ஊக்கமளிக்க முயலும் அயர்லாந்து கத்தோலிக்க பணி மையம், தற்போது காதலர் தினத்தையொட்டி அன்பு மற்றும் திருமணம் குறித்த சிந்தனைகளை உள்ளடக்கிய ஒலிப்பேழை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.