பிப்.09,2011. உலக அளவில், 20 கோடியே 50 லட்சம் பேர் வேலையில்லாமலும், இந்தியாவில், ஆறு
கோடிக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலை இல்லாமலும் உள்ளனர். உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார
மந்த நிலையும், படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுமே இந்நிலைக்கு காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த
2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் ஐரோப்பிய
நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட்டது. இதனால், உலகில் உள்ள எல்லா நாடுகளும்
பாதிக்கப்பட்டன. அதன் பின், பொருளாதார மந்த நிலை சிறிது சிறிதாக மாறி வருகிறது. இதனால்
பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி சிறந்த முறையில் வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு வரை
உலகில் வேலை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 20 கோடியே 50 லட்சம் பேர். இது 6.1 விழுக்காடாகும்.
இதில் 7 கோடியே 80 இலட்சம் பேர் இளைஞர்கள். கடந்த 2007ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7 கோடியே
35 இலட்சமாக இருந்தது. உலக தொழிலாளர் நிறுவனம் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கையை குறைக்கும்
வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, இந்த ஆண்டு வேலை இல்லாத தொழிலாளர்களின்
எண்ணிக்கை உலகில் 20 கோடியே 33 இலட்சமாக குறையும் என்று உலக தொழிலாளர் நிறுவனம் கூறியுள்ளது.