நலப்பணியாளர்கள் வாழ்வுக் கலாச்சாரத்தைக் கட்டி எழுப்புமாறு திருத்தந்தை அழைப்பு
பிப்.07,2011. மேலும், வருகிற வெள்ளிக்கிழமை உலக நோயாளர் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு
இம்மூவேளை செப உரையின் இறுதியில் பேசிய திருத்தந்தை, நலவாழ்வுத் துறையில் பணி செய்யும்
மக்கள், ஒழுக்கநெறி விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட வாழ்வுக் கலாச்சாரத்தைக் கட்டி
எழுப்புமாறு கேட்டுக் கொண்டார். திருச்சபையும் பொது மக்களும் நோயுற்றச் சகோதர சகோதரிகள்
பற்றிய விழிப்புணர்வைக் கொண்டிருக்கவும் அவர்களுக்காகச் செபிக்கவும் இந்நாள் நல்ல வாய்ப்பாக
இருக்கின்றது என்றும் அவர் கூறினார். கடவுள் தீமையின் வன்மையை எதிர்க்கிறார் என்றும்
ஒவ்வொரு சூழலிலும் நம் ஆண்டவர் மனிதர் மீது அக்கறை கொண்டு அவர்களின் நம்பிக்கையாகத் தம்மைக்
காண்பிக்கிறார் என்றும் திருத்தந்தை கூறினார். இன்னும், இம்மூவேளை செப உரையில் பங்கெடுத்த
இத்தாலியின் மனித வாழ்வுக்கு ஆதரவானப் பல்வேறு கத்தோலிக்கக் கழகங்களின் உறுப்பினர்களுக்குத்
தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை.இத்தாலி, மனித வாழ்வுக்கு ஆதரவான நாளை
இஞ்ஞாயிறன்று கடைபிடித்ததை முன்னிட்டு இந்த உறுப்பினர்களில் பலர் பச்சைநிறப் பலூன்களுடன்
இம்மூவேளை செப உரையில் கலந்து கொண்டனர்.