துனிசியா, எகிப்து ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரட்சிகள் குறித்து
வட ஆப்ரிக்க ஆயர்களின் அறிக்கை
பிப்.07,2011. துனிசியா, எகிப்து ஆகிய நாடுகளில் சுதந்திரம் மற்றும் மனித மாண்புக்கென
மேற்கொள்ளப்பட்டுள்ள புரட்சிகள் சமய அடிப்படையிலானவை அல்லவென்றும், இந்த புரட்சிகள் அந்நாடுகளில்
இஸ்லாமிய கிறிஸ்தவ உறவுகளையும், உரையாடல்களையும் வலுப்படுத்தும் என்றும் வட ஆப்ரிக்க
ஆயர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் ஐந்து நாட்களாய் Algiersல் நடைபெற்ற
வட ஆப்ரிக்க மண்டல ஆயர் பேரவைக் கூட்டத்தில் இவ்விரு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மக்களின்
புரட்சிகள் குறித்து ஆயர்கள் விவாதித்தபோது இக்கருத்துக்கள் கூறப்பட்டன. சுதந்திரம்
மற்றும் மனித மாண்பைக் குறித்து இளையோரிடையே அதிகமான விழிப்புணர்வு எழுந்துள்ளதென கூறும்
ஆயர்கள், அந்த விழிப்புணர்வு, சுதந்திர நாட்டின் குடிமக்களாய் வாழும் தங்களது உரிமையை
நிலைநாட்டும் வண்ணம் புரட்சிகளாய் மாறியுள்ளதென்று வட ஆப்ரிக்க ஆயர் பேரவையின் அறிக்கை
கூறியுள்ளது. மனசாட்சியின் சுதந்திரமே மிக அடிப்படையான சுதந்திரம் என்றும், இச்சுதந்திரமே
மற்ற சமுதாய, அரசியல் சுதந்திரங்களுக்கு வழியாகும் என்றும் வட அப்ரிக்க ஆயர் பேரவையின்
தலைவர் பேராயர் வின்சென்ட் ராபாத் (Vincent Rabat) கூறினார்.Algeriaவில் 1996ம் ஆண்டு
கடத்தப்பட்டு, கொலையுண்ட Trappist மடத்தைச் சார்ந்த ஏழு துறவிகளைக் குறித்து அண்மையில்
வெளியான பிரெஞ்ச் திரைப்படம் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இத்துறவியர் வாழ்ந்த
Tibhirine நகரின் Notre Dame மடத்தை வட ஆப்ரிக்க ஆயர் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட
அனைத்து ஆயர்களும் தங்கள் கூட்டத்தின் இறுதியில் சென்று பார்வையிட்டதாக செய்திக் குறிப்பொன்று
கூறுகிறது.