2011-02-05 15:00:22

பிப்ரவரி 06, வாழந்தவர் வழியில்...


1605ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி இத்தாலி நாட்டின் சிசிலியில் பிறந்தவர் கோர்லியோனின் பெர்னார்ட். (Saint Bernard of Corleone) இளவயதில் பல வீர, தீரச் செயல்களில் ஆர்வம் கொண்டிருந்த இவர், கத்திச் சண்டையில் தன திறனை வளர்த்துக் கொண்டார். வயது முதிர்ந்தோர் மற்றும் வலுவற்றோர் வன்முறைகளுக்கு உள்ளாகும்போது, பெர்னார்ட் தனது கத்திச் சண்டைத் திறமையால் அவர்களைக் காப்பாற்றினார்.
ஒரு முறை நடைபெற்ற கத்திச் சண்டையில் தன் எதிராளியை இவர் கொலை செய்தார். தன் குற்றத்திற்குப் பிராயச்சித்தமாக கப்பூச்சியன் துறவு மடத்தில் சேர்ந்து கடும் தவங்கள் மேற்கொண்டார். புனித பிரான்சிஸ் அசிசியார் மீது அதிகப் பற்றுள்ள இவர், மிகக் கடினமான தவ முயற்சிகளை மேற்கொண்டார். கடினமான ஒரு பலகையில் இரவு மூன்று மணி நேரங்களே உறங்கினார். ரொட்டித் துண்டும், நீருமே இவரது உணவானது.
மரியன்னை குழந்தை இயேசுவுடன் இவருக்குத் தோன்றி, இவர் கையில் குழந்தை இயேசுவைக் கொடுத்தார். இவரது மரண நாளை நான்கு மாதங்களுக்கு முன்பே இவரிடம் கூறினார். இவருக்கு முன்னறிவிக்கப்பட்டவாறே, 1667ம் ஆண்டு சனவரி 12ம் தேதி இவர் இறையடி சேர்ந்தார்.
சகோதரர் பெர்னார்டின் புண்ணிய வாழ்வால் மக்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். அவரது இறுதி சடங்கில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இவரது கல்லறை பல புதுமைகளுக்குக் காரணமாக அமைந்தது. இவர் இறந்த நூறாவது ஆண்டு இவர் முத்திபேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார். 2001ம் ஆண்டு இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் Corleoneன் பெர்னார்டைப் புனிதராக உயர்த்தினார்.யாரும் புனிதராகப் பிறப்பதில்லை. யாருக்கும் மனமிருந்தால் மனமாற்றமிருந்தால், புனிதராக இறக்க முடியும்.







All the contents on this site are copyrighted ©.