அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டுள்ள அனைவரும், இயேசுவின் வார்த்தைகளுக்குக்
கவனமாய் செவிசாய்க்கவும் வேண்டும் - திருத்தந்தை
பிப்.03,2011. கோவிலில் இயேசுவைச் சந்தித்த சிமியோன், அன்னாவைப் போல, அர்ப்பண வாழ்வில்
ஈடுபட்டுள்ள அனைவரும், இயேசுவின் முகத்தைக் காணவும், அவர் வார்த்தைகளுக்குக் கவனமாய்
செவிசாய்க்கவும் வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். இப்புதனன்று
கொண்டாடப்பட்ட அகில உலக அர்ப்பணிக்கப்பட்டோர் நாளன்று புனித பேதுரு பசிலிக்காவில் மாலைத்
திருவழிபாடு நடத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார். குழந்தை இயேசு கோவிலில்
காணிக்கையாக்கப்பட்ட இத்திருநாளன்று, அவரை உலகின் ஒளியாக நற்செய்தி பகர்கின்றது. அந்த
ஒளி மரியா, யோசேப்பு, சிமியோன், அன்னா ஆகியோர் மீதும், அவர்கள் மூலமாய் உலகில் உள்ள அனைவர்
மீதும் ஒளிர்ந்தது என்றுரைத்தார் திருத்தந்தை.தியான வாழ்வு மற்றும் செயல்பாடுகள் நிறைந்த
வாழ்வு என இருவழிகளில் அர்ப்பணிக்கப்பட்டோர் அழைக்கப்படுகின்றனர் என்றும், இவ்விரு வழிகளிலும்
கடவுளைக் காண்பதற்கு துறவறத்தார் அனைவரும் கடவுளின் வார்த்தைகளை கவனமாய் கேட்பதற்கு முயல
வேண்டும் என்றும் திருத்தந்தை இம்மாலை திருவழிபாட்டில் எடுத்துரைத்தார்.