22 ஆண்டுகளுக்கு பின் வரலாறு : மியான்மாரில் நாடாளுமன்றம் கூடியது
பிப்.01,2011. மியான்மார் வரலாற்றில், இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின் இத்திங்களன்று
முதன் முறையாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அந்நாட்டின் நிர்வாகத் தலைநகரான Naypyitaw
ல் கூடின. இந்த முதல் கூட்டத்தில், நாட்டின் புதிய அரசியல் சாசனம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
50 ஆண்டுகளாக நாட்டில் நிலவி வந்த இராணுவ ஆட்சி முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேநேரம்,
நாடு முழுவதும் 14 மாகாண சட்டசபைகளும் முதன் முறையாகக் கூடின.
மியான்மாரில் 1962ம்
ஆண்டிலிருந்து இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்தாண்டு நவம்பர் 7ம் தேதி, பொதுத் தேர்தல்
நடந்தது. இதில், அவுங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி கலந்து கொள்ளவில்லை.
தேர்தல் முடிவுகளில், இராணுவத் தலைமையால் இயக்கப்படும் ஐக்கிய ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக்
கட்சி(யு.எஸ்.டி.பி.,) பெரும்பான்மை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து,
கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின் இத்திங்களன்று முதன் முதலாக அந்நாட்டு நாடாளுமன்றக் கூட்டம்
துவங்கியது. மொத்தம் 440 இடங்கள் கொண்ட கீழவையும், 224 இடங்கள் கொண்ட மேலவையும் ஒரே நேரத்தில்
துவங்கின.
அவுங் சான் சூச்சி கட்சி தேர்தலில் பங்கேற்காததால் அதன் உறுப்பினர்கள்
யாரும் இடம் பெறவில்லை. கூட்ட நடவடிக்கைகளைப் பார்வையிட பத்திரிகையாளர்கள், அரசியல் நிபுணர்கள்,
பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது