திருத்தந்தை : நாம் அனைவரும் தூய்மையான வாழ்வு வாழவே அழைக்கப்பட்டிருக்கிறோம்
சன.29,2011. கிறிஸ்து தனது பணியைச் செய்வதற்குச் சிறப்பாக அழைத்துள்ள குருக்களும் குருத்துவ
மாணவர்களும் தங்களது பண்புகளில் மேலும் வளருவதற்கு கிறிஸ்து உதவுகிறார் என்று திருத்தந்தை
16ம் பெனடிக்ட் கூறினார். தூய்மையான வாழ்வு வாழ்வதற்காக அழைக்கப்பட்டுள்ள இவர்கள்,
இயேசு கிறிஸ்து வழியாகக் கடவுள் செய்த நன்மையையும் அவரது ஒப்புயர்வற்ற அருள்வளத்தையும்
இனிவரும் காலங்களில் எடுத்துக்காட்ட வேண்டும் எனவும் திருத்தந்தை கூறினார். வத்திக்கானில்
வாழும் எத்தியோப்பிய பாப்பிறைக் கல்லூரியின் உறப்பினர்களை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில்
சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, எத்தியோப்பிய நாட்டில் கத்தோலிக்க மறைப்பணித் தளத்தை
நிறுவிய திருப்பீடத் தூதர் புனித ஜூஸ்தீனோ தெ யாக்கோபிஸ் பற்றியும் எடுத்துக் கூறினார். தூய்மையான
வாழ்வு திருச்சபையின் மையமாக இருப்பதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, நாம் அனைவரும்
இந்த வாழ்வு வாழவே அழைக்கப்பட்டிருக்கிறோம் என்றும், இந்த எத்தியோப்பியக் கல்லூரி உறுப்பினர்கள்
அவர்கள் நாட்டில் வளர்ச்சியும் நல்லிணக்கமும் சிறந்து ஓங்குவதற்குத் தங்களது பங்கை அளிக்குமாறும்
கேட்டுக் கொண்டார்.மேலும், இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் போது, வத்திக்கான் பேதுரு
வளாகத்தில் கூடியிருக்கும், அமைதிக்காகக் குரல் கொடுக்கும் 5,000 சிறாரை வாழ்த்தி இரண்டு
புறாக்களையும் பறக்கவிடுவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.