பிலிப்பின்ஸ் நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பைக் குறித்து அந்நாட்டின் ஆயர்களின்
வன்மையான கண்டனம்
சன.26, 2011. பிலிப்பின்ஸ் நாட்டில் மணிலாப் பெருநகரில் இச்செவ்வாய் பிற்பகல் நடைபெற்ற
குண்டுவெடிப்பைக் குறித்து அந்நாட்டின் ஆயர்கள் தங்கள் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். மணிலாவில்
வணிகப்பகுதி என்றழைக்கப்படும் Makatiல் இச்செவ்வாய் பிற்பகலில் பேருந்து ஒன்றில் நடைபெற்ற
குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்; மற்றும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். தற்போதைய
அரசை நிலைகுலையச் செய்யும் ஒரு முயற்சியாக இது இருக்கக்கூடும் என்று கூறிய Cubao மறைமாவட்ட
ஆயர் Honesto Ongtioco இத்தகைய அழிவுச் செயல்களில் ஈடுபடுவோர் தங்கள் செயல்களின் விளைவுகளைக்
கண்டு மனம்மாற செபிக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.இந்த குண்டுவெடிப்பு தொடர்பானவர்களை
உடனடியாகக் கண்டுபிடிக்க அரசுக்கு மக்களும் உதவ வேண்டும் என்று Kalookan ஆயர் Deogracias
Iniguez மக்களைக் கேட்டுக் கொண்டார்.